![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி ; முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை
குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட பல கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இறுதி வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.
![தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி ; முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை Baby elephant taken to Mudumalai camp after failed attempt to reunite with mother elephant coimbatore தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி ; முதுமலை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/09/8c3f829abdefa52f3426e92bfbd1a7471717904076842113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனப்பணியாளர்கள் ரோந்து செல்வது வழக்கம்.
தாயை பிரிந்து சென்ற குட்டி யானை
கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, மூன்று மாதமான குட்டி யானை உடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.
தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.
சேர்க்க மறுத்த தாய் யானை
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு குட்டி யானையை கொண்டு வந்தனர். பின்னர் குட்டி யானைக்கு பழங்கள் இளநீர் கொடுக்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்கப்பட்டனர்.
குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட பல கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இறுதி வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அந்த குட்டி யானையை பராமரிக்க முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி இன்று அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)