கோவையில் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த பாட்டி கைது..!
துர்கேஷ் பிறந்த நேரம் சரியில்லாதால் தான் மகளும், மருமகனும் பிரிந்ததாகவும், அதனால் குழந்தையின் தலையை சுவரில் அடித்ததோடு பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

கோவை லாலி ரோடு அருகேயுள்ள அம்பகம் வீதியை சேர்ந்தவர் நந்தினி. 24 வயதான இவர் 5 ஆண்டுகளுக்கு முன், அத்தை மகன் உறவு முறையை சேர்ந்த நித்யானந்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் சாய்கிருஷ்ணா என்ற மகனும், ஒரு வயதில் துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நந்தினி மற்றும் நித்யானந்தம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 8 மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். முதல் மகன் சாய்கிருஷ்ணாவை நித்யானந்தமும், இரண்டாவது மகன் துர்கேஷை நந்தினியும் வளர்த்து வந்தனர். நந்தினி தனது தாய் நாகலட்சுமி மற்றும் துர்கேஷ் உடன், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நாகலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத்தால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் நந்தினி ஹோட்டல் வேலைக்கு சென்று வந்த நிலையில், குழந்தை துர்கேஷை நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு வேலை முடித்து நந்தினி வந்த போது, துர்கேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். குழந்தை எப்போது தூங்கியது என கேட்ட போது, இரவு 7.30 குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தையை வீட்டின் உள்ளே வைத்து கதவை பூட்டி விட்டு குப்பை கொட்ட சென்றதாகவும், பின்னர் வந்து பார்த்த போது தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்ததாகவும் நாகலட்சுமி தெரிவித்துள்ளார். பின்னர் நந்தினி தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை பார்த்த போது, வாயில் நுரை தள்ளி மயக்க நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது, வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சாய்பாபாகாலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் துர்கேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது குழந்தை துர்கேஷ் முகத்திலும், வாயிலும் காயங்கள் இருந்ததும், நாகலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதும் காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகலட்சுமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, துர்கேஷ் பிறந்த நேரம் சரியில்லாத்தால் தான் மகளும், மருமகனும் பிரிந்ததாகவும், அதனால் குழந்தையின் தலையை சுவரில் அடித்ததோடு பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நாகலட்சுமியை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















