Pattabiram Metro: அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு
சென்னை பட்டாபிராம் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, கோயம்பேட்டிலிருந்து வர உள்ள மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, அந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை
சென்னை என்றாலே, எங்கு திரும்பினாலும் டிராபிஃக் பிரச்னை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி இருக்கும்போது, மெட்ரோ ரயில் வந்த பிறகு, அலுவலகம் செல்லும் பலருக்கு, அது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையும் கிடைக்கிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரம்பத்தில், மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என்ற சிந்தனை இருந்தபோதிலும், அலுப்பில்லாத ஏசி பயணம், விரைவான போக்குவரத்து ஆகியவற்றால், மக்களை மெட்ரோவை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது இயக்கப்படும் மெட்ரோ வழித்தடங்கள்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 118. 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை, சுமார் 26. 1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், அதே போல், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45.8 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு மற்றொரு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடம் - அரசு நிதி ஒதுக்கீடு
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ வழித்தடம் 9,928 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய உள்ளது. இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இதற்காக, 2,442 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது, கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது. பணிகளை விரைந்து முடித்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















