அக்கம் பக்கத்தினருடன் சண்டை ! குடிபோதையில் மனைவியின் கையை வெட்டிய கணவன் !! அதிர்ச்சியில் மக்கள்
மது போதையில் அக்கம் பக்கத்தினருடன் சண்டையிட்ட கணவனை தட்டி கேட்ட மனைவியின் கையை துண்டாக்கிய கணவன்

போதையில் சண்டையிடும் கணவர்
ராணிப்பேட்டை மாவட்டம் , கலவை பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் ( வயது 65 ) வயதுடைய ஆறுமுகம். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 55 வயதுடைய லட்சுமி இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் மகள் திருமணமாகி அவரது மாமியார் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மகன் வெளியூரில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வருவதை ஆறுமுகம் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அக்கம் பக்கத்தில் அடிக்கடி தகராறு
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் ஆறுமுகம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஆறுமுகம் அக்கம் பக்கத்தினரிடம் தேவையில்லாமல் பேசி சண்டை போட்டுள்ளார். அப்போது லட்சுமி அவரை தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
மனைவியின் கையை வெட்டிய கணவன்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் வைத்திருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்து வந்து மனைவியின் வலது கையை துண்டாக வெட்டியுள்ளார். இதில் லட்சுமியின் வலது முழங்கை துண்டானது. இதனால் அலறிய லட்சுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துண்டான கையுடன் கலவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
போதை தெளிந்தவுடன் விசாரணை
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மதுபோதையில் இருந்த ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர். மேலும் போதை தெளிந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். தலைக்கேறிய மது போதையில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















