Chennai Parandur Airport: ரூட் கிளியர்.. கிடைத்தது திட்ட அனுமதி.. தொடங்கியது பரந்தூர் விமான நிலையப் பணிகள்..!
Parandur Airport Latest News: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான, திட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய அளவில் இருக்கக்கூடிய முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணியர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை கையாளுவதில் வருங்காலத்தில் சிக்கல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பரந்தூர் விமான நிலைய திட்ட மதிப்பு என்ன? Parandur Airport Project Value?
மறுபுறம் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சகத்திற்கு விண்ணப்பித்த 'டிட்கோ'
ஒரு இடத்தில் புதியதாக விமான நிலைய அமைக்கப்பட வேண்டும் என்றால் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டும் என்பது விதிகளாக இருந்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முதலில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி அளித்தது.
திட்ட அனுமதி விண்ணப்பம்
முக்கிய அனுமதிகள் கிடைத்த பிறகு திட்ட அனுமதி பெறுவதற்காக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் திட்ட அனுமதியை நேற்று வழங்கியுள்ளது. இதனால் பரந்தூர் விமான நிலையம் கட்டுமானம் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த என்ன நடக்கும் ?
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு இட அனுமதி மற்றும் திட்ட அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும், கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை தமிழக அரசு விரைவில் துவங்க உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கான முதல் கட்ட கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிகள் முடிவடைவது எப்போது?
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டால், 2028-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் சென்னை இரண்டாம் நிலையத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.






















