துப்புரவு பணியாளர்கள் போராட்டம்; விஜய் நேரில் வந்திருக்கலாம். ஆனால்., - தாடி பாலாஜி சொன்னது என்ன?
திரைத் துறையினர் வீட்டில் பணியாற்றும் பணியாளர்களுக்கே அவர்கள் மரியாதை வழங்குவது இல்லை. இவர்களின் வலி திரைத்துறையில் இருக்கும் சிலருக்கு தெரியாது - தாடி பாலாஜி

நேரில் ஆதரவு தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 12 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
தூய்மை பணியாளர்கள்தான் சென்னை மாநகரத்தின் நாயகன், நாயகி. தினந் தோறும் நம் குப்பைகளை எடுத்துச் செல்லும் துப்புரவு பணியாளர்களுக்கான மரியாதையை யார் வழங்கியுள்ளார்கள் ? தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக துறையின் அமைச்சர் கே.என் நேருவை நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேசி முற்றுப்புள்ளி வைப்பேன்.
துப்புரவு பணியாளர்களின் போராட்டத்திற்கு திரைத் துறையினர் பலர் ஆதரவு தெரிவிக்க தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ;
நாம் அனைவரையும் எதிர் பார்க்க முடியாது. சில பேருக்கு மனசாட்சி இருக்க வேண்டும். திரைத்துறையினர் வீட்டில் பணியாற்றும் பணியாளர்களுக்கே அவர்கள் மரியாதை வழங்குவது இல்லை. இவர்களின் வலி திரைத்துறையில் இருக்கும் சிலருக்கு தெரியாது. போராட்டம் தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர் பேசாமல் துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சர் ஏன் பேச வேண்டும் ?
துப்புரவு பணியாளர்கள் போராட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் வந்திருக்கலாம். அப்படி அவர் வந்திருந்தால் கதையை வேறு. சான்ஸை தலைவர் மிஸ் செய்து விட்டார். மதுரையில் நடைபெறவுள்ள விஜய்'யின் இரண்டாவது மாநாடு சக்சஸ் தான்.
இதனை தொடர்ந்து திரைப்பட நடிகை அம்பிகா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் தரையில் அமர்ந்து ஆதரவை தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.





















