Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
Chennai Property Tax: சென்னையில் சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்ந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Chennai Property Tax: சென்னையில் சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன்? எதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரி உயர்வு சர்ச்சையும்.. விளக்கமும்..!
சென்னையில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும், எந்த வித காரணமும் இன்றி, முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கவலை தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பைப் பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.5 லட்சம் பேருக்கு நோட்டீஸ்
சென்னையில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்த போதிலும், திடீரென அனுப்பப்பட்டுள்ள வரி மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் தான் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைவாக வரி மதிப்பிடப்பட்ட சுமார் 3.5 லட்சம் சொத்துகளுக்கு இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு செய்யப்பட்ட 3.04 லட்சம் குடியிருப்பு சொத்துகளில் 55 சதவிகித கட்டிடங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வரி உயர்ந்துள்ளது. மேலும், 95 சதவிகித சொத்துகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்குள் தான் வரி உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
ட்ரோன் அடிப்படையிலான GIS சர்வேக்கள், செயற்கைக்கோள் தரவுகள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் GST துறைகளின் தகவல்கள், மற்றும் உரிமையாளர்களின் சுயவிவரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக, குடியிருப்புப் பகுதிகளில் வணிகச் செயல்பாடுகள் நடப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் நேரில் சென்றும் ஆய்வு செய்த பிறகே இந்த மறுமதிப்பீடு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது பல இடங்களில் குடியிருப்புகளாக கட்டப்பட்ட கட்டிடங்கள் வணிகரீதியாக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது. கட்டிடம் கட்டப்பட்ட இடத்தை தவிர்த்து இடங்களுக்கு எந்த வரியும் வசூலிக்கப்படாமல் இருந்துள்ளது. இவை அனைத்தையும் மறுமதிப்பீடு செய்த மாநகராட்சி நிர்வாகம் சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு மறுமதிப்பீடு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அதன்படி, வரி ஏதும் உயர்த்தப்படவில்லை என்றும், இதுநாள் வரை முறையாக வசூலிக்கப்படாத வரிகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் தான் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பு குறிப்பிடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















