கோயம்பேடு விடுதியில் சிறுமிக்கு பாலியல் கொடுமை - துணை நடிகர் கைது
சென்னையில் நடந்த பல்வேறு செய்திகளை கீழே காணலாம்.

கோயம்பேடு விடுதியில் சிறுமிக்கு பாலியல் கொடுமை ; துணை நடிகர், திமுக நிர்வாகி கைது !
சென்னை கோயம்பேடு விடுதியில் அடைத்து வைத்து , சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் , தலைமறைவாக இருந்த துணை நடிகர் மற்றும் தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டனர். சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி கொடுமைப்படுத்திய வழக்கில் , கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மாள் ( வயது 45 ) உட்பட ஆறு பேரை , கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் கைது சிறையில் செய்து அடைத்தனர். இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என தொடர்ந்து விசாரித்தனர்.
இதில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி கண்ணா ( வயது 60 ) மற்றும் அவரது நண்பரான திருவள்ளுரைச் சேர்ந்த ரமேஷ் ( வயது 40 ) ஆகிய இருவரும் கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் , சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதில் பாரதி கண்ணா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் பட்டய கிளப்பு , பேய காணோம் ஆகிய திரைப் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளதும் தெரிய வந்தது.
தி.மு.க பிரமுகரான ரமேஷ் , ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளதும் தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும், போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் , குழந்தைகளை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்து பலியான சம்பவம் , நிறுவன மேற்பார்வையாளர் கைது
சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த 2 நாட்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்வதற்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் மேற்பார்வையாளனர் சுரேஷ் குமார் தலைமையில் கள்ளக் குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் , ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் ( வயது 37 ) பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ( வயது 40 ) சென்னை வானகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் ( வயது 28 ) ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குப்பன் கழிவுநீர் மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மயங்கி மலக்குழிக்குள் விழுந்துள்ளார். இதை பார்த்த சங்கர், ஹரிகரன் ஆகிய இருவரும் குப்பனை காப்பாற்றுவதற்காக மலக்குழிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி உள்ளே மயங்கி விழுந்துள்ளனர். உடனே சக தொழிலார்கள் சங்கர் , ஹரிஹரன் ஆகிய இரண்டு பேரையும் மலக் குழியிலிருந்து வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.
விஷவாயு தாக்கி குப்பன் மூச்சு திணறி மலக்குழிக்குள் விழுந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் மலக் குழியிலேயே சிக்கிக் கொண்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு குப்பனின் உடலை மலக்குழியிலிருந்து மீட்டனர்.
சங்கர், ஹரிஹரன் ஆகியோர் சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருவருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஹரிஹரன் உடல் நிலை மோசமடைந்ததால் பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2013 - ம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகும் கூட இது போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த குப்பன் குடும்பத்தினருக்கு ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து 30 லட்ச ரூபாய் நிவாரண தொகை கொடுக்கப்பட்டது. பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கர் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரரின் மேற்பார்வையாளர், மாங்காடு, வசந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ( வயது 46 ) என்பவர் மீது கொளத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





















