Chennai Electric Train Issue: சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு ஷாக்.! மேலும் குறைக்கப்பட்ட சேவை எண்ணிக்கை; அவதி
சென்னையில் மின்சார ரயில்கள் ஏற்கனவே குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது ரயில்களின் சேவை எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை பல்வேறு கட்டங்களாக ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த 10-வது மற்றும் 11-வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால், கடந்த 20-ம் தேதியில் இருந்து, 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வருகிறது.
சேவைகள் குறைப்பு - ரயில்வே வேண்டுகோள்
இந்த பணிகள் காரணமாக, கடந்த 5 நாட்களாக பொதுமக்கள், குறிப்பாக மின்சார ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதன் பலனாக ஒரு சிறந்த புதிய எழும்பூர் ரயில் நிலையத்தை மக்கள் பெற முடியும் என்றும் ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, புறநகர் மின்சார ரயில் பயணிகளின் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பேருந்து சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் குறைக்கப்பட்ட ரயில் சேவைகள்
இந்நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, ஏற்கனவே 204-ஆக இருந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து செல்லும் ரயில்கள், சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், எழும்பூருக்கு வரும்போது, பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில், செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஏற்கனவே சிரமத்தை அனுபவித்து வந்த மின்சார ரயில் பயணிகள், தற்போது மேலும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.






















