கொட்டும் கனமழை! சென்னை மக்களே உஷார்! செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, 2170 கன அடியாக உயர்ந்துள்ளது

காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சென்னை குடிநீருக்கு முக்கிய ஏரியாக இருக்கக்கூடிய, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் ( 3.645 டி.எம்.சி நீர்) கன அடியாகும்.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும், கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும், தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினாலும், நீர் பிடிப்பு பகுதிகளின் வகைபாடு மாற்றத்தினால் மிகை வெள்ளீநீர் (Flash flood) பெறப்பட வாய்ப்பு உள்ளதினால், நீர்த்தேக்கத்தின் வெள்ள கொள்ளளவை கூடுதலாக உயர்த்த வேண்டியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு
தொடர்ந்து எரிக்க நீர்வரத்து அதிகரித்தவர் வந்ததால், வருகின்ற மழையை கருத்தில் கொண்டு ஏரியிலிருந்து முன்கூட்டியாக நேற்று மாலை 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ?
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர். காவனுர். குன்றத்துர், திருமுடிவாக்கம். வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள பய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை என்ன ?
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ( 22-10-2025) காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து, 2170 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.





















