மகள்களின் படிப்புக்காக பரிகார பூஜை !! ஜோதிடர் செய்த கொடூரம் !! நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
படிப்பு சரியாக வரவாயில்லை என கூறி , ஜோதிடரிடம் சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை

மகள்கள் சரியாக படிக்கவில்லை
சிவகங்கை மாவட்டம் மானகிரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ( வயது 52) என்பவர் ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகள் செய்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவர், தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் சரியாக படிப்பதில்லை என்பதால், அதற்கான பரிகாரம் செய்ய கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜோதிடர் ராமகிருஷ்ணன், 2 பெண் பிள்ளைகளையும், மானகிரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும் படி கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண், தனது இரண்டு மகள்களையும் ஜோதிடரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமிகளை தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை
தாயை ஒரு அறையில் தனியாக இருக்குமாறு கூறி விட்டு, பரிகார பூஜை செய்வதாக கூறி, அந்த 2 பெண் பிள்ளைகளையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த தகவலை யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் உங்கள் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் அந்தச் சிறுமிகளிடம் மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு பயந்து போன அந்த இரண்டு சிறுமிகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில், இரண்டு சிறுமிகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்த போது ஜோதிடர் ராமகிருஷ்ணன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமிகள் கூறியுள்ளனர்.
200 ஆண்டுகள் சிறை தண்டனை
இது குறித்து, அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மாநகர காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நூறாண்டுகள் வீதம், இரண்டு பேருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தார்.
அத்துடன் அபராதமாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க அரசுக்கும் உத்தர விட்டார். போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது தான் முதல்முறையாக அதிகபட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.























