இதென்ன கொடுமை.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய தடை.. இதுதான் காரணமா?
அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது. அதாவது அங்கு வசிக்கும் ஆணும், பெண்ணும் காதலிக்கக்கூடாது. வெளியில் திருமணம் செய்தால் எந்த பிரச்னையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தின வாரம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் ஒரு கிராம பஞ்சாயத்தில் காதல் திருமணம் செய்தால் ஊரை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைக் காணலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணங்கள் பெரும்பாலும் சாதி, மதங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. காதல் திருமணங்கள் இவற்றிற்கு விதிவிலக்கு என சொல்லப்பட்டாலும் ஒரே சாதி, ஒரே மதம் என இருந்தால் சில வீடுகளில் அந்த காதலுக்கு கூட ஓகே சொல்லும் சூழல் உள்ளது. காதலுக்காக எத்தகைய போராட்டத்தை வேண்டுமானாலும் காதலிப்பவர்கள் நடத்தும் நிலையில் அப்படியான காதல் திருமணம் செய்தால் ஊரை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என ஒரு கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
அப்படி செய்தால் சில விஷயங்களுக்கு அவர்களுக்கு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அஜ்னாலா தாலுகாவில் தரிவால் என்ற பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமத்தில் தான் உள்ளது.
என்ன காரணம் தெரியுமா?
கடந்த பிப்ரவரி 7ம் தேதி தான் இந்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாயத்து பெரியவர்கள் கூடி இதனை முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பந்தப்பட்ட அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது. அதாவது அங்கு வசிக்கும் ஆணும், பெண்ணும் காதலிக்கக்கூடாது. வெளியில் காதல் திருமணம் செய்தால் எந்த பிரச்னையும் இல்லை. அதையும் மீறி காதல் திருமணம் செய்தால் கிராமத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பம் சமூக ரீதியாக ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆண், பெண் குடும்பத்தினருக்கு பஞ்சாயத்து மற்றும் அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் ரத்து செய்யப்படும். எந்தச் சான்றிதழிலும் அல்லது அவர்கள் தொடர்பான பிற ஆவணங்களிலும் பஞ்சாயத்து தலைவர்கள் கையெழுத்திட மாட்டார்கள். அந்த இரு குடும்பத்தினர் ஏதேனும் பிரச்னையில் சிக்கினால் கிராமத்தில் உள்ள யாரும் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சாட்சியம் அளிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த கிராமத்தில் அடுத்தடுத்து 6 காதல் திருமணங்கள் நடைபெற்றுள்ளது. ஒரே கிராமத்திற்குள் வசிக்கும் நபர்களுக்குள் திருமணம் நடைபெறுகிறதன் காரணமாக மணமக்கள் அருகருகிலோ அல்லது எதிரெதிராகவோ வசிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் திருமணமாகும் பெண்ணை மகளாக பாவிக்க வேண்டுமா, மருமகளாக பார்க்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனால் உறவுகளில் தேவையற்ற குழப்பமும், சச்சரவும் ஏற்படுகிறது.
இதன் காரணமாக அந்த கிராமத்தில் வசிக்கும் ஆண், பெண் காதல் திருமணம் மட்டுமல்ல நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைக் கூட மேற்கொள்ளக்கூடாது என கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்திற்குள் திருமணம் செய்வது சமூக விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது என்று பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















