Muthalvar Marunthagam: மக்களே.. ரூ.3 லட்சம் மானியம்; வங்கிக்கடன் பெற உதவி! முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு அழைப்பு
Muthalvar Marunthagam Apply online: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர், இணையதளம் மூலம் 05.02.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.ஃபார்ம் / டி.ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர், இணையதளம் மூலம் 05.02.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
என்ன ஆவணங்கள் தேவை?
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்குக் குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம், எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில், இடத்திற்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம்ரூ.3.00 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, TAHDCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.
மானியம் எப்படி விடுவிக்கப்படும்?
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 இலட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தெரிவு செய்யப்படும் தொழில் முனைவோர், முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப் பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவிய் பிறகு, இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும்.
விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.mudhalvarmarundhagam.tn.gov.in






















