HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
தகுதியுள்ள நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அறங்காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். இதன் முக்கிய பணி இந்து கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகித்து, பாதுகாத்து, கோயில் நிர்வாகம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதாகும். இதன் முக்கிய பணிகளாக இந்து கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்தல்,கோயில் சொத்துகள் மற்றும் வருவாயைப் பாதுகாத்தல், கோயில் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தல்,அறக்கட்டளைகள் மற்றும் நன்கொடைகளை நிர்வகித்தல்,கோயில் ஊழியர்கள் தொடர்பான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவையாகும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. கோயில்களின் பராமரிப்பு, கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோயில்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்க அறங்காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட சில அறங்காவலர்கள் பதவி விலகியுள்ளதால், பல கோயில்களுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் 757 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 49(1)-ன் கீழ் பட்டியலில் சேராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியுள்ள நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அறங்காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, கோயில்களின் விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.விண்ணப்பங்களை 20.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கும், 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















