தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு
திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நவீன தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

இந்திய இலக்கிய விருதுகளில் உயரிய விருதான ஞானபீட விருது கவிப்பெரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகிலன் , ஜெயகாந்தன் தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பின் இந்த விருது தமிழ் கவிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. தமிழ் திரையுலகைச் பொறுத்தவரை வைரமுத்துவிற்கு இந்த விருது கிடைத்துள்ளதை பெரியளவில் வரவேற்று வருகிறார்கள். என்றாலும் நவீன தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்துவிற்கு ஞானபீட விருது வழங்கப்படுவது தமிழுக்கே அவமானம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
ஞானபீட விருது பெற்றது குறித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். "ஞானபீட விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்படும் ஞானபீட விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை தமிழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. விருதுகளும் இப்போதுதான் ஞானபீடம் தமிழ்க் கவிதைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கு ஞானபீடம் இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது. என்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன். இந்த விருது என் வயதைக் குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்." என அவர் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம்
தனது வலைதளத்தில் ஜெயமோகன் "பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று.வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.
இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்." என அவர் தனது தளத்தில் எழுதியுள்ளார்
பின்குறிப்பு : ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சில பகுதிகள் இவை.























