TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
2010ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET விலக்கு கோரி இயற்றப்பட்ட தீர்மானத்தில், நாடாளுமன்றச் சட்டத் திருத்தம் அவசியம்- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

23.08.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட 3,28,701 ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 25, 2026 அன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு மேலும் கூறி உள்ளதாவது:
சட்டச் சிக்கல் மற்றும் கால அவகாசம்
இந்தத் தீர்மானம் ஒரு முக்கிய அரசியல் நகர்வாக இருந்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 31 ஆகஸ்ட் 2028 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, வெறும் தீர்மானம் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தராது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கான வலுவான கோரிக்கை மட்டுமே. இதனால், தானாகவே TET விலக்கு கிடைக்காது; உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மாறாது.
RTE சட்டம்–2009, பிரிவு 23-ல்:
23.08.2010-க்கு முன்பு, அப்போது நடைமுறையில் இருந்த விதிகளின்படி நியமிக்கப்பட்டு, உரிய கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சித் தகுதி பெற்ற ஆசிரியர்கள், பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் TET தேர்ச்சி பெறத் தேவையில்லை என்ற புதிய பாதுகாப்புப் பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.
மேலும் அந்தச் சட்டத்தில் பணித் தொடர்ச்சி பாதுகாப்பு பணிநீக்கம் மற்றும் கட்டாய ஓய்விலிருந்து பாதுகாப்பு ஊதிய உயர்வு, பணிமூப்பு, ஓய்வூதியம் பாதுகாப்பு TET இல்லாமலும் பதவி உயர்வு ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் மற்றும் பணப்பலன்கள் பாதுகாப்பு ஆகியவை தெளிவாக இடம்பெற வேண்டும்.
நாடாளுமன்ற நடைமுறை
மத்திய கல்வி அமைச்சகம் சட்டத் திருத்த வரைவைத் தயாரிக்க வேண்டும். மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் NCTE கருத்தைப் பெற வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும். மக்களவை அல்லது மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டு அவைகளிலும் ஒரே வடிவில் நிறைவேற்ற வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகே அது சட்டமாகும். அதற்கேற்ப NCTE அறிவிக்கைகளும் மாநிலப் பணிவிதிகளும் திருத்தப்பட வேண்டும்.
இது சாதாரண சட்டத் திருத்த மசோதா என்பதால், பொதுவாக இரண்டு அவைகளிலும் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எளிய பெரும்பான்மை போதுமானது. அரசியலமைப்புத் திருத்தத்திற்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையில்லை.
RTE சட்டத்தின் தற்போதைய பிரிவு 23(2)-ன்படி மத்திய அரசு தற்காலிகத் தளர்வை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும். எனவே நிரந்தர TET விலக்கிற்கு நாடாளுமன்றச் சட்டத் திருத்தமே அவசியம். நாடாளுமன்றம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்ட சட்ட அடிப்படையான RTE சட்டம் மற்றும் NCTE விதிகளைத் திருத்த முடியும்.
தமிழக அரசு அடுத்து செய்ய வேண்டியது
சட்டமன்றத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் மாதிரி சட்டத் திருத்த மசோதாவையும் இணைக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் ஆதரவையும் பெற வேண்டும். சட்டம் அமலுக்கு வரும்வரை ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோர வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் முதல் அரசியல் வெற்றி. உண்மையான சட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில், 23.08.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர TET விலக்கு வழங்கும் வகையில் RTE சட்டம் பிரிவு 23-ஐ நாடாளுமன்றம் திருத்த வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















