குழந்தைகளை கவரும் பேய் படம்..'பேய் கதை' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு
ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

பேய் கதை படத்தின் டிரெய்லர்
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி'ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.
ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ''இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
குழந்தைகளை இப்படம் கவரும்
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.
'பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை ஆஷ் மெலோ பேசுகையில் : ''கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை எலிசபெத் பேசுகையில் : ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகை ஜீ.வி.மகா பேசுகையில் : ''இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















