பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் தொடங்கி இயக்குநர் பாக்யராஜ் போன்ற நான்கு முதன்மையான இயக்குநர்களை தமிழ் சினிமா இழந்துள்ளது

தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பயணத்தில் தனித்துவமான தடம் பதித்த இயக்குநர்களில் கே. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். பெயர்களின் தொடக்க எழுத்தான "பா" என்பதால் ரசிகர்களால் அன்போடு "பா வரிசை இயக்குநர்கள்" என்று அழைக்கப்பட்ட இவர்கள், தமிழ் திரையுலகின் நான்கு வெவ்வேறு முகங்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். இன்று இவர்கள் அனைவரும் காலமாகிவிட்ட நிலையில், தமிழ் சினிமா ஒரு பொற்கால அத்தியாயத்தை இழந்துவிட்டதாகவே உணரப்படுகிறது.
இயக்குநர் பாலச்சந்தர்

இயக்குநர் கே. பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் புதுமையான கதைகளையும், சமூகச் சிந்தனைகளையும் தைரியமாகப் பேசியவர். பெண்களின் மனநிலையையும், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாக எடுத்துரைத்த அவரது படைப்புகள் இன்றும் காலத்தால் அழியாதவை. மேலும், பல திறமையான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.
இயக்குநர் பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா தனது ஒளிப்பதிவாலும், இயல்பான காட்சியமைப்பாலும் தமிழ் சினிமாவை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். இயற்கை வெளிச்சத்தையும், அமைதியான காட்சிகளையும் பயன்படுத்தி மனித உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்திய அவரது திரைப்படங்கள், உலகத் தரத்திற்கு இணையான படைப்புகளாகப் போற்றப்படுகின்றன.
இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா தமிழ் சினிமாவை கிராமங்களுக்குள் அழைத்துச் சென்ற இயக்குநர். நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த திரைப்பட உலகிற்கு, மண்ணின் மணம் வீசும் கதைகளையும், கிராமத்து மனிதர்களின் உணர்வுகளையும் அறிமுகப்படுத்தியவர். அவரது படங்கள் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்தன.
இயக்குநர் பாக்யராஜ்

பாக்யராஜ் தனது தனித்துவமான திரைக்கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் எளிமையான கதையம்சங்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சாதாரண மனிதனின் வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் திறமையால் அவர் தனி முத்திரை பதித்தார்.
திரைப்படங்களை மட்டுமில்லாமல், இந்த நான்கு இயக்குநர்களும் ஒரு தலைமுறையின் ரசனையையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் . அவர்களின் படைப்புகள் இன்றும் புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு பாடமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றன. அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் மற்றும் திரைப்படங்கள் என்றும் அழியாத நினைவுச் சின்னங்களாக நிலைத்திருக்கும். அவர்களின் கலை மரபும், படைப்பாற்றலும் தலைமுறைகளைத் தாண்டி தொடர்ந்து வாழும் என்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப் பெரிய அஞ்சலியாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















