கமலின் 16 வயதினிலே ரிலீஸின் ஏற்பட்ட சிக்கல்..சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த பாக்கியராஜ்
அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கயிலன் பட முன்னோட்ட விழா
ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் அருள் அஜித் பேசுகையில்
''உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார். எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.
'கயிலன்' என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், 'நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்' என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.
நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.
மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்''என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில்
''இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
கே ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு 'டார்லிங் டார்லிங் டார்லிங் ' என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் 'டாடி டாடி' என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் 'பேட்டா பேட்டா மேரா பேட்டா' என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.
நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்தப் படத்தின் பெயர் 'கயிலன்' என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் 'கயிலன்' பெயருக்கான பொருளை சொன்னார்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான '16 வயதினிலே 'படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.
இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,'' என்றார்.
***





















