TN Election 2026 ECI: அடேங்கப்பா..! தமிழகத்தில் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்
TN Election 2026 ECI: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவிற்கு பரிந்துரைக்கப்படவில்லை என, தேர்தல் ஆணையம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Election 2026 ECI: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பூத்துகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்களிலும் ஒரே அடியாகவும், மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளில் முதற்கட்டமாக 44 ஆயிரத்து 376 வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 23ம் தேதியன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆனால், அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூட மறுவாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் குறிப்பாக மேற்குவங்கத்தில் தேர்தல் வன்முறை மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவது என்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை அந்த நிலை மாறி இருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.
புதிய உச்சத்தில் வாக்குப்பதிவு
தமிழ்நாடு மற்றும் மேகுவங்க மாநிலத்தில் கடந்த வியாழனன்று நடந்த வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவாகியுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் முறையே சுமார் 74 லட்சம் மற்றும் 83 லட்சம் வாக்காளர்கள் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மூலம் நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும், மேற்குவங்கத்தில் 92 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
குற்றச்சாட்டுகளும் .. மறுப்பும்..
வாக்குப்பதிவை ஒட்டி பல்வேறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோக பல இடங்களில் முறைகேடுகள், கள்ள ஓட்டுகள், இயந்திர கோளாறுகள், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டின் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கத்தில் தீவிர கண்காணிப்பு
மேற்குவங்கத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்த தேர்தலில் அந்த மாநிலத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மும்முனை சரிபார்ப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள், வாக்குப்பதிவுப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது வாக்குப்பதிவு/சாவடி முகவர்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வாக்குச்சாவடி அணுகல் வழங்கப்பட்டது. அடையாள ஆவணம் இல்லாத எந்தவொரு வெளியாளும் அல்லது அங்கீகாரம் இல்லாத நபரும், வாக்குச் சாவடியின் சுற்றுவட்டாரப் பகுதிக்குள் கூட அனுமதிக்கப்படாமல் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தியுள்ளது.
மும்முனை சரிபார்ப்பு
- வாக்குச்சாவடியைச் சுற்றியுள்ள உடனடிப் பகுதியே முதல் சரிபார்ப்புப் புள்ளியாக பின்பற்றப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் 144 தடை உத்தரவு (பழைய சட்டத்தின்படி) அமல்படுத்தப்பட்டது. இந்தப் பகுதிக்குள் நுழைந்த ஒவ்வொரு நபரின் அடையாள ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் போன்றோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
- வாக்குச்சாவடிக்குள் நுழையும் பகுதியில் இரண்டாம் கட்ட சரிபார்ப்பு நடைபெற்றது. ஒவ்வொருவரையும் வாக்களிக்க வரிசையில் நிற்க அனுமதிக்கும் முன், அவர்களைச் சோதிப்பதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்காளர் வரிசைக்குச் செல்ல அனுமதிக்கும் முன், அவர்களின் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை அல்லது வாக்காளர் சீட்டை ஆய்வு செய்தனர்
- மூன்றாவது சரிபார்ப்பு என்பது, வாக்காளர் தனது விரலில் மை இட்டு வாக்களிப்பதற்கு முன்பு. வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி அதிகாரியால் செய்யப்படும் வழக்கமான அடையாளச் சரிபார்ப்பு ஆகும்
இத்தகைய தீவிர கண்காணிப்பின் மூலமே, மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டிய அநாவசியமான சூழலை தேர்தல் ஆணையம் இந்த முறை சாத்தியப்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்




















