Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ்நாட்டிற்கு இதனால் சாதகமா? பாதகமா? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில், இதைவிட மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பது ஆகும்.
தொகுதி மறுவரையறை திருத்தம் எப்படி?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 82ன்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவைத் தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றம் மாற்ற வேண்டும். அதேபோல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 170வது பிரிவின்படி இது மாநில சட்டமன்றங்களின் தொகுதி வரையறையை நெறிப்படுத்துவதுடன், மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கிறது.
தொகுதி மறுவரையறை குறித்து இந்திய அரசியலமைப்புச் சடடம் சொல்வது இதுவே ஆகும். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் 1952ம் ஆண்டு, 1963ம் ஆண்டு, 1973ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
1976ம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறை திருத்தத்தின்படி, மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை மக்கள்தொகை கணக்கீட்டின்படி மாற்றப்பட்டது. ஆனால், 1976ம் ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான அரசு மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாமல் இருப்பதற்காக இதை நிறுத்திவைத்தது.
இதையடுத்து, 2002ம் ஆண்டு தொகுதி மறுவரையறையின்போது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் எண்ணிக்கை அப்படியே தொடர்ந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென்மாநிலங்கள் மிக கடுமையாக இதை எதிர்த்ததே இதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
இந்தியாவைப் பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், பீகாருக்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. தென் தமிழகத்தில் அதிக மக்களவைத் தொகுதி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வர உள்ள இந்த தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால், மக்கள்தொகையை முறைப்படி கட்டுப்படுத்தாத வட இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். அதாவது, நாட்டிலே அதிக மக்களவைத் தொகுதி கொண்ட உத்தரபிரதேசத்தில் தற்போது உள்ள 80 தொகுதி 120 தொகுதியாக உயரும். பீகாரில் தற்போது உள்ள 40 தொகுதி 70 தொகுதிகளாக உயரும்.
ஆனால், மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றிகரமாக செயல்பட்ட தமிழ்நாட்டிற்கு 39ல் இருந்து 41 தொகுதிகளாக மட்டுமே உயரும். கேரளாவில் 20 தொகுதியில் இருந்து 19 தொகுதிகளாக குறையும். தெலங்கானாவில் 17ல் இருந்து 20 ஆகவும், கர்நாடகாவில் 28ல் இருந்து 36 ஆகவும் ஆந்திராவில் 25ல் இருந்து 28 ஆகவும் உயரும்.
என்ன ஆபத்து?
இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு ஆகும். ஆனால், அரசியல் பிரதிநிதித்துவத்தில் தென் இந்தியாவிற்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுப்பதாக தொடர் விமர்சனங்கள் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தென்னிந்தியாவில் மக்களவைத் தொகுதிகள் வெறும் 130 மட்டுமே ஆகும். ( தமிழ்நாடு 39, கர்நாடகா 28, ஆந்திரா 25, கேரளா 20, தெலங்கானா 17, பாண்டிச்சேரி 1, லட்சத்தீவு 1) ஆகும்.
எஞ்சிய 413 தொகுதிகள் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் எந்த ஒரு அரசாக இருந்தாலும் அந்த 413 தொகுதிகளில் பெரும்பான்மையை தக்கவைத்தாலே தென்னிந்தியாவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால் மட்டுமே அவர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆந்திராவிற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிப்பது போல.
ஆனால், இந்த தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால் வட இந்தியாவின் தொகுதிகள் உச்சம் பெற்று அவர்களது ஆதரவுடனே ஆட்சி அரங்கேறும். தென்னிந்தியாவும், தென்னிந்தியாவின் கோரிக்கைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்படும் அபாயம் உருவாகும். தற்போதுள்ள அரசு மட்டுமின்றி எதிர்காலத்தில் எந்த அரசு தோன்றினாலும் அவர்களும் இவ்வாறு செயல்படும் அபாயமும் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















