West Bengal: 3வது முறையாக ஆட்சியா? பாஜக-விற்கு எதிராக மம்தா போட்டுள்ள ஸ்கெட்ச்!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பாஜக கடும் சவால் அளித்து வரும் நிலையில், ஆட்சியை மீண்டும் தக்கவைக்க மம்தா பானர்ஜி வியூகம் வகுத்து வருகிறார்.

West Bengal Election 2026: அசாம், பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் வியாழக்கிழமை 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மோதல்:
மேற்கு வங்கத்தில் வரும் 24ம் தேதி முதற்கட்டமாகவும், வரும் 29ம் தேதி இரண்டாம் கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரசும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக-வும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மம்தா பானர்ஜி அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
மம்தா வியூகம்:
இந்த நிலையில், மம்தா பானர்ஜி பாஜக-விற்கு எதிராக ட்ரிபிள் எம் என்ற வியூகத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, மகளிர், மம்தா மற்றும் முஸ்லீம் ஆகியவையே மம்தா பானர்ஜியின் அஸ்திரமாக உள்ளது.
மகளிர் வாக்குகள்:
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள சுமார் 7 கோடி வாக்காளர்களில் 3 கோடி 33 லட்சம் பேர் மகளிர் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களின் வாக்குகளை கவர மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்குத் திருமண உதவித்தொகை என மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்ல திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பெண் தலைவர்கள்:
அதேபோல, மேற்கு வங்க பாஜக-வில் முதலமைச்சர் வேட்பாளர் வலுவாக இல்லாதது, மேற்கு வங்க பாஜக-வில் பெண் தலைவர்கள் யாரும் பிரபலமாக இல்லாததையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் புகழையும், செல்வாக்கையும் பிம்பத்தையும் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலப்படுத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
இஸ்லாமிய வாக்குகள்:
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வாக்காளர்கள் ஆவார்கள். இந்த மொத்த இஸ்லாமியர்கள் வாக்குகளையும் கவர மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். பாஜக மீதுள்ள மதச்சார்புள்ள கட்சி என்ற விமர்சனத்தை மிகப்பெரிய அளவில் பரப்புரையிலும், இணையத்திலும் மேற்கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 100 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் என்று பாஜக எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர்கள் பலவீனமாக உள்ள தொகுதிகளில் பணியைத் தீவிரப்படுத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், பாஜக வலுவாக உள்ள வடக்கு மண்டலம், பழங்குடிகள் வாழும் ஜங்கிள் மஹால் மண்டல பகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசின் பணிகளைத் தீவிரப்படுத்த மம்தா உத்தரவிட்டுள்ளார்.
நாடே எதிர்பார்ப்பு:
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு நிகராக மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் மம்தா ஆட்சியைக் கைப்பற்றினால் பாஜக-விற்கு அது பெரும் பின்னடைவாகவே இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















