லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
விழுப்புரம் திமுகவில் ‘உள்குத்து’ அரசியல்: பொன்முடியைப் பகைத்துக் கொண்டு லட்சுமணன் கரையேறுவாரா? அதிருப்தியில் உடன்பிறப்புகள்!

விழுப்புரம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், விழுப்புரம் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல், அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், விழுப்புரம் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குள் வெடித்துள்ள கோஷ்டி பூசல், அக்கட்சியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த முறை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தையே வீழ்த்திய தெம்பில் இருக்கும் வேட்பாளர் லட்சுமணனுக்கும், திமுகவின் ‘பவர் சென்டர்’ என அறியப்படும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான மோதல் இப்போது தெருவுக்கு வந்துள்ளது.
அன்று கரம் பிடித்தார்.. இன்று புறக்கணிக்கிறார்!
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், விழுப்புரத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அதிமுகவின் சி.வி. சண்முகத்தை லட்சுமணன் வீழ்த்தியதற்கு முக்கியக் காரணம் பொன்முடி தான். அப்போது தொகுதி முழுக்க பொன்முடியின் கரங்களைப் பற்றிக்கொண்டு வாக்கு கேட்ட லட்சுமணன், "பொன்முடி கொண்டு வந்த திட்டங்களே எனது வெற்றிக்கு அஸ்திவாரம்" என முழங்கினார். குறிப்பாக, விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் வரை பொன்முடியின் பங்களிப்பைச் சொல்லித் தான் லட்சுமணன் கரை சேர்ந்தார். ஆனால், வெற்றி பெற்ற சில காலத்திலேயே லட்சுமணன் தனது போக்கை மாற்றிக்கொண்டதாகக் கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
பேனர்களில் மறைப்பு.. மேடைகளில் தவிர்ப்பு!
விழுப்புரம் மத்திய மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு, லட்சுமணன் மாவட்டப் பொறுப்பாளராக உயர்ந்த பிறகு மோதல் முற்றியது. கழக நிகழ்ச்சிகளில் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியின் பெயரை அழைப்பிதழில் தவிர்ப்பது. நகரம் முழுவதும் வைக்கப்படும் பிரம்மாண்ட பேனர்களில் பொன்முடியின் புகைப்படத்தை அச்சிடாமல் புறக்கணிப்பது. கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பொன்முடிக்கு முறையான அழைப்பு விடுக்காதது. இது போன்ற செயல்களால் பொன்முடியின் தீவிர ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். "ஏணி வைத்தவரை எட்டி உதைக்கிறார் லட்சுமணன்" என்பதே அவர்களின் தற்போதைய கோஷமாக உள்ளது.
புஷ்பராஜ் விவகாரம்: சிதறும் வாக்கு வங்கி?
மறுபுறம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் போர்க்கொடி லட்சுமணனுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வந்த புஷ்பராஜுக்கு, மாவட்டப் பொறுப்பாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி லட்சுமணன் முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய ஆதிதிராவிடர் வாக்குகளைப் பெற்றுத் தருவதில் புஷ்பராஜ் முக்கியப் பங்கு வகித்தவர். இப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் பணிகளைப் புறக்கணித்து வருவது, லட்சுமணனின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
"படுத்துக்கொண்டே வெற்றி" - வேட்பாளரின் ‘மனப்பால்’ கணக்கு!
இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் வேட்பாளர் லட்சுமணன் ஏனோ அதீத நம்பிக்கையில் உள்ளார். தன் ஆதரவாளர்களிடம் பேசும்போது, "கடந்த முறையே ஜாம்பவான் சி.வி. சண்முகத்தையே ஓட ஓட விரட்டியவன் நான். இந்தத் தேர்தலில் தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை; படுத்துக்கொண்டே வெற்றி பெற்றுவிடுவேன்" என்று அவர் கூறியதாகத் தொகுதி முழுக்கப் பேச்சு ஓடுகிறது.
வேட்பாளரின் இந்த மெத்தனப்போக்கு (Overconfidence) கட்சித் தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. மூத்த தலைவரான பொன்முடி மற்றும் ஆதிராவிட நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் ஆகிய இரு பெரும் துருவங்களின் ஆதரவின்றி, "படுத்துக்கொண்டே வெற்றி" எனும் லட்சுமணனின் மனப்பால் பலிக்குமா அல்லது உள்குத்து அரசியலில் சிக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
ட்ரெண்டிங் செய்திகள்



















