குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சாலை பராமரிப்பிற்கே முன்னுரிமை! வில்லிவாக்கத்தில் அதிமுக வேட்பாளர் உத்திரவாதம்
வில்லிவாக்கம் தொகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வசதியை வெற்றி பெற்ற பிறகு சீரமைக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
வில்லிவாக்கம் தொகுதி:
ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதிகளில் ஒன்று வில்லிவாக்கம். திமுக சார்பில் கார்த்திக் மோகன், தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பரப்புரை:
வில்லிவாக்கம் தொகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் எஸ்ஆர் விஜயகுமார் பேசியதாவது,
"தொகுதியில் நீண்டநாள் நிலுவையில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு இப்பிரச்சினைகளைச் சரிவர கையாளத் தவறியது. குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சாலை பராமரிப்பு ஆகியவை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும்.
மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் உள்ளூர் வசதிகள் சீரமைக்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும். சிறு வணிகங்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்களும் அமல்படுத்தப்படும்.
மக்கள் பாதிப்பு:
வில்லிவாக்கம் தொகுதி பல ஆண்டுகளாக பல்வேறு குடியிருப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கால்வாய்களில் தேங்கும் கழிவுநீர் மற்றும் துர்நாற்றம், குப்பை மேலாண்மை குறைபாடு, சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்தும் மக்களை பாதித்து வருகின்றன.
மெட்ரோ பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து முனையம் மூடப்பட்ட பிறகு, முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
மின்தடை:
சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை, அடிப்படை வசதிகள் குறைபாடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாததும், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களாக அந்த தொகுதியில் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல, போதைப்பொருள் புழக்கமும் அந்த பகுதியில் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, கழிவுநீர் வடிகால் வசதி என பல்வேறு பிரச்சினைகள் இந்த தொகுதியில் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















