Aadhav Arjuna: கரூர் சம்பவம் ஜனநாயகன் ஷூட்டிங்கா? - ஆதவ் அர்ஜூனா போட்டுடைத்த உண்மை!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தீவிர களப்பணியாற்றி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் பி டீம் ஆக இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தீவிர களப்பணியாற்றி வருகிறது. அந்த வகையில் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆண்டாலும் வடசென்னை முற்றிலும் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. அண்ணாநகர் போல ஆர்.கே.நகரும், நுங்கம்பாக்கம் போல பெரம்பூரும் மாறி விடக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர்” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் பாஜகவின் B டீம் என சொன்னார்கள். டெல்லியில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். அது உண்மையாக இருந்திருந்தால் ஜனவரியிலேயே ஜனநாயகன் ரிலீஸாகி அதன் மூலம் 1,500 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருப்பார். ஆனால் அவர் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் ஜனநாயகன் படம் இன்னமும் முடக்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று சொன்னதும், கூட்டணிக்கு நாம் போக மாட்டோம் என்று சொன்னதும் அதிமுக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அது என்னவென்று கேட்டால், கரூர் துயர சம்பவத்தை திரைப்பட ஷூட்டிங் என கூறி வருகிறார்கள்.
எவ்வளவு கொடூரமான, கேவலமான மனநிலை இருந்தால் அதிமுக மற்றும் பாஜகவினர் இப்படி ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். அவர்கள் தான் கரூருக்கு வந்தார்கள். பாஜக குழு வந்தது. அனைவரும் திமுக தான் காரணம் என சொன்னார்கள். என்றைக்கு மதச்சார்பற்ற சமூக நீதி என விஜய் சொன்னாரோ அன்றைக்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கக்கூடிய வலிமையான தலைவராக விஜய் மாறிவிட்டார்.
இதற்கு முன்னால் திமுகவை மட்டும் எதிர்த்து நின்ற அவர், என்றைக்கு ரமலான் நோன்பு விழாவில் மதச்சார்பற்ற கொள்கை என்பதை முடிவு செய்தாரோ, அதை இப்போதும் சொல்கிறேன். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே நாங்கள் மட்டும் தான் உங்களுடன் எப்போதும் இருப்போம். உயிருள்ளவரை தமிழக வெற்றிக் கழகம் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும். சமீபத்தில் நாம் எடுத்த கருத்துக் கணிப்பில் திமுகவை விட தமிழக வெற்றிக் கழகத்திற்கு இரண்டு சதவிகித வாக்கு அதிகமாக உள்ளது. அதனால் அவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.




















