TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சு. ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை அக்கட்சியின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இதில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை தினகரன் அறிவித்துள்ளார்.
இதன்படி,
பெரியகுளம் (தனி) - கதிர்காமு
மன்னார்குடி- காமராஜ்
திருவையாறு – வி. கார்த்திகேயன்
காரைக்குடி - தேர்போகி பாண்டி
திருப்பத்தூர் - ஞானசேகரன்
நாங்குநேரி - இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தரராஜன்
திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தொட்டியம் ராஜசேகரன்
சைதாப்பேட்டை- செந்தமிழன்
பூந்தமல்லி - ஏழுமலை
மடத்துக்குளம் - சண்முகவேலு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக
இதற்கிடையே திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் மா.சு. ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் உள்ளனர். மேலும் மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள், சூடு பறக்க நடந்து வருகின்றன. இதற்கிடையே திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக 27 தொகுதிகளிலும் பாமக 18 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளை அதிமுக அளித்துள்ளது.
பாஜகவில் எப்படி?
அமைச்சர் பெரியகருப்பன் (திருப்பத்தூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) அமைச்சர் எ.வ.வேலு (திருவண்ணாமலை) தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளது. அதேபோல அமைச்சர் மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி) ஆகிய தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதியும் சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரமும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி
ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி மைலாப்பூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். தொடர்ந்து நேற்று (மார்ச் 27) தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதேபோல அதிமுக சார்பில் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்




















