Selvaperunthagai: 23 இடங்களில் காங்கிரஸ் தோல்வி.. மக்கள் முடிவை ஏற்கிறோம்.. செல்வப்பெருந்தகை கருத்து!
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸில் இருந்த உட்கட்சி பூசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அக்கட்சிக்கு எதிரான ஒன்றாக அமைந்து விட்டது.

தமிழ்நாடு மக்களின் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றியைப் பெற்றது. 108 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேசமயம் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸில் இருந்த உட்கட்சி பூசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அக்கட்சிக்கு எதிரான ஒன்றாக அமைந்து விட்டது.
அக்கட்சி மயிலாடுதுறை, குளச்சல், மேலூர், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசுவிடம் சுமார் 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்
இதனைத் தொடர்ந்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட செல்வப்பெருந்தகை, “தமிழ்நாடு மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முழு மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனையும் மாநில முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தி அவர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் தொகுதியில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழமைக்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் நமது கூட்டணி வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், மேலும் தமிழ்நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட காங்கிரஸ் உறவுகளுக்கும் என் நன்றிகள்.
மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பாதையில், சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பை உறுதியாக நிலைநிறுத்த தொடர்ந்து செயல்படுவோம்.“மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை” என தெரிவித்துள்ளார்
விஜயுடன் பேசிய ராகுல்காந்தி
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், “விஜயுடன் தொலைபேசியில் பேசி, தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள சிறப்பான வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன். இந்த மக்கள் தீர்ப்பு, இளைஞர்களின் உயர்ந்து வரும் குரலை பிரதிபலிக்கிறது; அதை இனியும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் கூடாது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த கடின உழைப்புக்கும் ஆதரவுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















