மோடியின் பிடியில் அதிமுக! – திருவள்ளூரில் ராகுல் காந்தி அதிரடி அட்டாக்
தமிழ்நாட்டில் அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடியாகத்தான் அதிமுக இருக்கிறது - ராகுல் காந்தி விமர்சனம்

ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவினர் நரேந்திர மோடியிடம் சரண் அடைந்துவிட்டதாக திருவள்ளூர் பிரச்சாரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசுகையில், “நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் மண்ணோடு நெருங்கிய உறவு உண்டு. தமிழ்நாட்டுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்துவதே மத்திய பாஜக அரசின் திட்டமாகும். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்துடனே தொகுதி மறுவரையறை மசோதா. அதனை முறியடித்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் மொழி, கலாச்சாரத்தை காக்கும் உரிமை உள்ளது. பண்டைய காலத்தில் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், ராணுவம் இல்லாமல் அதே தாக்குதலை பாஜக நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது
தமிழர்கள் யார் என்பதை பாஜக புரிந்துக் கொள்ளவில்லை. தமிழ் மொழி தமிழர்களுக்கு எவ்வளவும் முக்கியம் என்பது பாஜகவுக்கு புரியவில்லை. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, மொழியை அழிக்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேற விடமாட்டோம். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்ன செய்ய நினைக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் தமிழ் இனத்துக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இணைந்து தமிழ்நாட்டு மக்களை, தமிழ் மொழியை தாக்குகிறார்கள். பாஜக தமிழ் மீது தாக்குதல் நடத்தும்போது எல்லாம் நான் தமிழனாகவே உணர்கிறேன்.
பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது
மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்கும் ஆட்களை தமிழ்நாட்டில் முதலமைச்சராக்க முயற்சிக்கின்றனர். சமூகநீதி என்றால் என்னவென்று இந்தியாவுக்கு காட்டியது தமிழ்நாடு. மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள்வதற்கு கூட்டாளி வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடியாகத்தான் அதிமுக இருக்கிறது. ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவினர் நரேந்திர மோடியிடம் சரண் அடைந்துவிட்டனர். பெரியாரின் சிந்தனைகளை, தத்துவங்களைத் தகர்க்க பாஜகவும் ஆர்எஸ்எஸும் சதி செய்கிறது. அவரின் சமூக நீதிக் கொள்கைகளை அழிக்கப் பார்க்கிறார்கள், முதலில் கொள்கைக்கான போர் பிறகுதான் அரசியல்” என்று பேசினார்.
பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி. ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி திமுக வேட்பாளர் நாசர், பூவிருந்தவல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















