TN Election 2026: ஒத்தையில போயி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்! என்ன நடக்குது திருத்தணியில?
TN Election 2026: தவெக சார்பில் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியகுமார் கட்சியினர் யாருமின்றி தனி ஆளாக இன்று வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக என்ற பலம்பொருந்திய கட்சிக்கு போட்டியாக நடிகர் விஜய்யின் தவெக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தனித்துப் போட்டியிடும் தவெக:
தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பரப்புரை அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள தவெக வேட்பாளர்கள் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தனி ஆளாக வாக்குச் சேகரித்த தவெக வேட்பாளர்:
#TVKforTirutanni#ThalapathyCM2026@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BussyAnand pic.twitter.com/bJayKKUBuP
— TVKAdvocate_SathyaKumar (@TVKSathyaKumar) April 3, 2026
திருத்தணி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுபவர் வழக்கறிஞர் சத்தியகுமார். இவர் இன்று காலை திருத்தணியில் தனி ஆளாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், தவெக வேட்பாளர் தனி ஆளாகச் சென்று வாக்கு சேகரித்தார். டீக்கடைகள், சாலையில் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரிடமும் தனி ஆளாகவே சத்தியகுமார் வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம் என்று கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் கட்சியின் நிர்வாகிகள், கட்சியின் தொண்டர்கள் என யாரும் உடன் இல்லாதது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டாக்கியது. ஆனாலும், அவர் சளைக்காமல் அனைத்து வாக்காளர்களையும் சிரித்த முகத்துடன் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
#TVKForTirutanni#ThalapathyCM2026@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @BussyAnand @TVKWarriorsHQ pic.twitter.com/ZTvkwdcV0Q
— TVKAdvocate_SathyaKumar (@TVKSathyaKumar) April 3, 2026
உட்கட்சி மோதலா?
திருத்தணியில் தவெக-வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலின்போதும் அவர் கட்சி நிர்வாகிகளை முறையாக அழைத்து விருப்பமனுத் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மேலும், திருத்தணி இளைஞர்களை தவெக வேட்பாளர் சத்தியகுமார் அவதூறாக பேசியதாகவும் விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், தவெக வேட்பாளர் சத்தியகுமார் வாக்காளர்களிடம் நெருக்கம் காட்டவும், அவர்களுடன் அதிகளவு நேரத்தை செலவு செய்து கலந்துரையாடவுமே தனியாக சென்று வாக்கு சேகரித்ததாகவும் கூறப்படுகிறது. சத்தியகுமார் தனியாகச் சென்று வாக்கு சேகரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தொடருமா? முடிவுக்கு வருமா?
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமை திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகிகளையும், வேட்பாளர் சத்தியகுமாரையும் அழைத்துப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்களில் திருத்தணி வேட்பாளர் சத்தியகுமார் தனி நபராக பரப்புரையில் ஈடுபடமாட்டார் என்று கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















