Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
பாஜக தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது. தமிழ் சாதாரண மொழி கிடையாது. எவ்வளவு தைரியம் இருந்தால் அமித்ஷாவும், மோடியும் தமிழ் மொழியை அழிக்க துடிப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை நாங்கள் ஒருபோதும் மிரட்டியதில்லை. ஆனால் பாஜக அதிமுகவை மிரட்டுகிறது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். பொன்னேரியைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பேசிய அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் சரமாரியாக விமர்சித்தார்.
ராகுல் காந்தி தனது உரையில், “இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்குள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். நுழைகின்ற தேர்தலாகும். அவற்றை நாம் அனுமதிக்கக்கூடாது. நேற்று நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி, அமித்ஷா தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை கொண்டு வர எடுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நாடு வாழ்ந்து கொண்டிருப்பதாக இருவரும் சொன்னார்கள். அவர்கள் தேர்தலுக்காக இந்தியாவின் வரைபடத்தை மாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டை சீரழிக்க மோடி, அமித்ஷா இருவரும் முயற்சிக்கிறார்கள்.
எல்லா மாநிலங்களின் உரிமைகளும், மொழிகளும், வரலாறும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். பாஜக தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது. தமிழ் சாதாரண மொழி கிடையாது. எவ்வளவு தைரியம் இருந்தால் அமித்ஷாவும், மோடியும் தமிழ் மொழியை அழிக்க துடிப்பார்கள். அதிமுகவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அக்கட்சியை பாஜக முழுவதுமாக உள்வாங்கியுள்ளது. அதிமுக மூலம் பாஜக தமிழ்நாட்டில் நுழைய முயற்சிக்கிறது. இங்கு அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டை இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆள வேண்டும். நாங்களும் டெல்லியில் ஆண்டு கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டின் மீது எந்தவித திணிப்பையும் மேற்கொள்ளவில்லை. எங்கள் கூட்டணியின் அங்கமாக திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள். நாங்கள் எப்போதும் அவர்களை மிரட்டியதில்லை.
நம்முடைய மொழி,கலாச்சாரம், உரிமைகளை சிதைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகளை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தும். தமிழ்நாட்டை யாரும் நெருங்க முடியாது. சமூக நீதிக்கான மாநிலம் இதுவாகும். பாஜக தமிழ்நாட்டை குறைத்து மதிப்பிடுகிறது. இங்குள்ள மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு மக்களின் பலத்தையும், உறுதிப்பாட்டையும் மோடி, அமித்ஷா தேர்தல் நாளில் உணர்வார்கள்.
நாங்கள் உங்கள் ஊழியனாக டெல்லியில் இருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் குரல் கொடுக்க நான் இருக்கிறேன். இந்த தேர்தல் இரண்டு சிந்தாந்தத்தங்களுக்கு இடையேயானது. நாம் இந்த நாட்டை ஒருங்கிணைந்த இந்தியாவாக பார்க்கிறோம். அவர்கள் பிரிவினைவாதம் பேசுகிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார். அவரால் அதிமுக உள்ளிட்ட எதனை வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















