Perambur: டாஸ்மாக் ரெய்டு.. திலகபாமாவால் அனல் பறக்கும் பெரம்பூர் தொகுதி.. கள நிலவரம்!
பெரம்பூரில் பாமக வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் களமிறங்கியுள்ளார்கள்

சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற சட்டவிரோதமாக மது விற்பனையை பாமக வேட்பாளர் திலகபாமா தட்டிக் கேட்டதற்கான பரபரப்பு பின்னணியில் தெரியவந்துள்ளது.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாடு அரசியல் களம் 4 முனை போட்டியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரம்பூரில் பாமக வேட்பாளராக திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் களமிறங்கியுள்ளதால் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பிற்குரிய தொகுதியாக பெரம்பூர் மாறியிருக்கிறது.
இந்த நிலையில் பாமக வேட்பாளர் திலகபாமா அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி பெரம்பூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் போதை கலாச்சாரத்தால் ஏற்படுகின்ற அவலங்கள் குறித்து தங்களது வேதனையை கொட்டித் தீர்த்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய திலகபாமா, வெற்றி பெற்றவுடன் பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், “மதுபோதையால் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை சீரழிக்கப்படுகின்றனர். நன்றாக வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இந்த குடிபழக்கத்தால் இன்று நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் போல தமிழ்நாடு வர வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் நேற்று அதிகாலையில் தனது தேர்தல் பணிமனைக்கு அருகே திலகபாமா நடைபயிற்சியில் ஈடுபட்டார். அந்த நேரம் அங்குள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை கண்டறிந்தார். கொடுங்கையூரில் வியாசன் நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் இயக்கி வரும் பாரில் விடியற்காலை 6 மணிக்கே மது விற்பனை நடந்து வந்துள்ளது. இதனைக் கண்ட திலகபாமா உடனடியாக கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் ராஜா, தமிழ்மணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சட்டவிரோதமாக மதுபானம் விற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இனி டாஸ்மாக் பார்களில் இதுபோல் சட்டவிரோத மது விற்பனை நடக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் திலகபாமா அறிவுறுத்தினார். இந்த சம்பவம் பெரம்பூர் பகுதி மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. வாக்கு கேட்டு சென்ற இடத்தில் பெண்கள் தங்களது இன்னல்களை கொட்டித் தீர்ந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த திலகபாமாவிற்கு அப்பகுதி பெண்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும், மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனால் ஸ்டார் தொகுதியான பெரம்பூர் களம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















