இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என மாற்றப்படும் - வன்னியரசு
இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என்று அழைக்கப்படும் எனவும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - வன்னியரசு

விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியைத் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் என்றும், இத்தொகுதி இனி 'திண்டிவனம்' அல்ல, 'திண்டிவளம்' என்று அழைக்கப்படும் எனவும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என விசிக வேட்பாளர் வன்னியரசு உறுதி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளர் வன்னியரசு திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அந்த வகையில் இன்று திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி மரக்காணம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடகோட்டிப்பாக்கம், ஆலத்தூர், அசப்பூர், குரும்புரம், கந்தாடு எம்.புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மரக்காணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தயாளன் தலைமையில் மரக்காணம் கிழக்கு ஒன்றியத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை புரிந்த கூட்டணி கட்சி வேட்பாளர் வன்னிய அரசுக்கு மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார், அதனை தொடர்ந்து எம்.புதுப்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க செல்லும்போது வேட்பாளரை குதிரை வண்டியில் ஏற்றி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க வைத்தார், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக வேட்பாளர் வன்னியரசு கூறியதாவது:-
தொழிற்புரட்சி மற்றும் வேலைவாய்ப்பு
திண்டிவனம் தொகுதி இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்கு இடம்பெயர்வதைத் தடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சவுக்கு மரங்கள் அதிகம் பயிரிடப்படும் இப்பகுதியில், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி புதிய காகித தொழிற்சாலை அமைக்கப்படும். விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான நெல் கொள்முதல் கிடங்குகள் கட்டித் தரப்படும். சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளைத் திண்டிவனத்திற்கும் கொண்டு வரச் சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும் எனவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் இத்தொகுதிக்கு எந்த நற்பணிகளையும் செய்யவில்லை. சட்டமன்றத்தில் மக்களுக்காகக் கோரிக்கைகளை எழுப்பாத ஒரே எம்.எல்.ஏ அவர்தான். அவரது அலுவலகம் முறையாகப் பராமரிக்கப்படாமல் பாலடைந்து கிடைப்பதே அவரது செயல்பாட்டிற்குச் சான்று. நான் வெற்றி பெற்றால், திண்டிவனம் மற்றும் மரக்காணத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களைத் திறந்து மக்களின் குறைகளைத் தீர்ப்பேன்.
இத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு, 'பானை' சின்னத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் ரசிகர்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு ஆதரவளிப்பதாக வன்னியரசு குறிப்பிட்டார், முன்னாள் அமைச்சர் மஸ்தான் மற்றும் ஒன்றியச் செயலாளர் தயாளன் ஆகியோரின் சீரிய பணியால், சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து திண்டிவனம் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் வன்னியரசுவை ஆதரவு திரட்டிப் பிரச்சாரம் மேற்கொண்ட அனைதிந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி சி.என் ராமமூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொருளாதாரப் புரட்சி
செய்யூர் மரக்காணம் பகுதியில் 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தைக் கொண்டு வர எங்களது கட்சி தொடர்ந்து போராடி வெற்றிகண்டுள்ளது. இது இந்தியாவிலேயே மட்டுமல்லாது, உலகிலேயே மிகப்பெரிய அனல் மின் நிலையமாக அமைய உள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான அனைத்து ஆரம்பக்கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அவை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்பு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் யானை சின்னம் வழங்கப்பட்டது, பின்னர் அது பானை சின்னமாக மாற்றப்பட்டது. எனவே, விசிக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'பானை' சின்னம் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றுதான்.
திண்டிவனம் பகுதி எப்போதுமே சமூக நல்லிணக்கத்தின் பூமியாகத் திகழ்கிறது. சாமானிய மக்களுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் பாடுபடும் வேட்பாளரை மக்கள் ஆதரிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் தாங்களே வேட்பாளராகப் போட்டியிடுவதாகக் கருதி, தீவிரமாகப் பணியாற்றி அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















