MK Stalin: விஜயை முந்திய முதல்வர் ஸ்டாலின்.. திருச்சி கிழக்கில் தீவிர பரப்புரை... அமோக வரவேற்பு!
இன்று காலையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவாக அவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டே வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மிக தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
சூடுபிடித்த தேர்தல் களம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாடு அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - டாக்டர் ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் யாருக்கு வாக்குகள் கிடைக்கும், எந்த கட்சியின் வாக்குகள் சிதறப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் சில மணி நேரத்தில், திருச்சியில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 1, 2026
அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்...
"தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க… https://t.co/34TFZvzujc
திருச்சி கிழக்கில் முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். தொடர்ந்து நேற்றிரவு திருச்சி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவாக அவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டே வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர்களான கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உடனிருந்தனர். திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என்.நேருவும், திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸூம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இன்று திருச்சி உழவர் சந்தை பகுதியில் காலை 9 மணிக்கும் மற்றும் கரூர் ராயனூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
இதனிடையே இதே திருச்சி கிழக்கு தொகுதியில் தான் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதியான நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் அவர், தொடர்ந்து அங்கு பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு முன்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.




















