TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
சூடுபிடிக்கும் தேர்தல் களம்... நெருங்கும் வேட்புமனுத் தாக்கல்- பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம்: என்னதான் காரணம்?

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காமல் உள்ளன.
160-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில், பாஜக, காங்கிரஸ் இரட்டை இலக்க வேட்பாளர்களையே கொண்டிருந்தும் இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றன.
எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
திமுக – 164
அதிமுக – 166
காங்கிரஸ் - 28
பாஜக - 27
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 3 - புனித வெள்ளி, ஏப்ரல் 4 - சனி, ஏப்ரல் 5 - ஞாயிறு என்பதால் நாளை (ஏப்ரல் 2) மற்றும் ஏப்ரல் 6 ஆகிய இரு தினங்களே உள்ளன.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்யாமல் திணறி வருகின்றன.

என்ன காரணம்?
பாஜக வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரை கோவை வடக்கு தொகுதி யாருக்கு என்பதில் வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே போட்டி நிலவுகிறதாம். கோவை தொகுதி எனக்குத்தான், வேண்டுமெனில் அண்ணாமலையை மொடக்குறிச்சியில் நிற்கச் சொல்லுங்கள் என்று வானதி தரப்பு கூறிவிட்டதாகவும் அண்ணாமலை கோவை வடக்குதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் உட்கட்சிப் பூசல் குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. அதன் வேட்பாளர்கள் தேர்வு ஒருதலைப் பட்சமாக நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அதுபற்றி வெளிப்படையாகவே பொங்கினர். இதுகுறித்து காங்கிரஸ் டெல்லி மேலிடத்துக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதனால் தாமதம் ஆகி வருவதாகவும் கிசுகிசுக்கிறது சத்யமூர்த்தி பவன்.
சூறாவளி வேகத்தில் ஈபிஎஸ், ஸ்டாலின்!
இதற்கிடையே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ஆளாக அதிமுகதான் தொகுதிப் பங்கீட்டை முடித்தது. தேர்தல் அறிக்கையையும் எடப்பாடி பழனிசாமிதான் முதலில் வெளியிட்டார்.
தொடர்ந்து 166 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அறிவிப்பை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும் இரு தலைவர்களும் தங்களின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த (பாஜக, காங்கிரஸ்) வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல், அவர்களுக்கும் சேர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





















