Prakash Raj: முதலமைச்சர் ஆசை கேட்குதா? - விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்!
திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது நாம் செய்ய வேண்டியது என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் என பழனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் தீவிர தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி தொகுதியில் போட்டியிட்டு சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு வாக்கு கேட்டு பிரகாஷ்ராஜ் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், “சினிமா மாடல் என ஒன்று உள்ளது. ஒரே படத்தின் மூலம் பணம் சம்பாதித்து விடலாம்.மிகப்பெரிய அளவில் ஸ்டாராக மாறி விடலாம். அது சினிமாவில் சாத்தியம். ஒரு சினிமாவில் நீங்கள் டாக்டர், இன்ஜினியர், முதல்வராக மாறலாம். ஆனால் அரசியலில் அப்படியே முதல்வராகி விட முடியுமா?. யார் அரசியல் பேச வேண்டும்? என் அளவிற்கு அரசியல் பேசியது உண்டா?. இத்தனை வருடங்களில் தமிழ்நாட்டில் மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்னை வந்தபோது வந்தது நின்றது உண்டா?, உங்கள் மேல் மக்கள் வைத்திருக்க அன்பு திறமைக்கு தான் தவிர, அரசியலுக்கு கிடையாது. அதை நீங்கள் பயன்படுத்தி கொள்கிறீர்கள்.
வெயிலில் வரிசையில் நின்று, கட் அவுட் அமைத்து, வீட்டைப் பத்தி யோசிக்காமல் வேலையை விட்டு விட்டு காட்டிய அன்பை, அரசியலுக்கு பயன்படுத்துவீர்களா?, நடிகருக்கு ரொம்ப பிடிச்சா 3 விரலை தொண்டையில் விட்டு விசிலடிக்கலாம். ஆனால் நாட்டையெல்லாம் கொடுக்க முடியாது. அதை கொடுக்கக்கூடாது. அரசியல், சினிமா என்பது வெவ்வேறானது.
அதற்கு களத்தில் இறங்கி பேச வேண்டும். சீமான் எவ்வளவோ பரவாயில்லை. 10 வருடமாக மக்களைப் பற்றி பேசி வருகிறார். பெரிய பெரிய நடிகர்களுக்கு இதெல்லாம் ஆகாதது. திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது நாம் செய்ய வேண்டியது. அதில் ஜெயித்தவர்கள் நமக்கு வேலை செய்ய வேண்டும். இந்தியாவில் ஜெயித்தவர்கள் அரசியல் பார்க்கிறார்கள். மக்களாகிய நாம் வேலைப் பார்க்கிறோம்.
இந்தியாவுடன் அரசியல் என்ன, நாம் யாரை தேர்வு செய்கிறோம், எந்த விஷயத்துக்கெல்லாம் தமிழ்நாடு துணை நிற்கிறது, எந்த அணி தமிழுக்காக துடிக்கும் என்பதெல்லாம் யோசிக்க வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தல் அதிமுக - திமுக, விஜய் சொல்வதைப் போல தவெக - திமுகவுக்கோ நடக்கும் தேர்தல் கிடையாது. இது ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழ்நாடு எப்பவும் இந்தியாவுக்கு ஒரு மாடலாக இருந்துள்ளது. எந்த அணிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















