பாஜகவின் சித்துவேலைகள் தமிழகம், புதுச்சேரியில் எடுபடாது: திருமாவளவன் ஆவேசம்!
பாஜகவின் சித்துவேலைகள் தமிழகம், புதுச்சேரி தேர்தலில் எடுபடாது. தமிழகம், புதுச்சேரியில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை - திருமாவளவன்

புதுச்சேரி: பாஜகவின் சித்துவேலைகள் தமிழகம், புதுச்சேரி தேர்தலில் எடுபடாது. தமிழகம், புதுச்சேரியில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை. இதை வரும் தேர்தலில் மக்கள் உறுதிபடுத்துவார்கள், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜகவின் அரசியல் தந்திரங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எடுபடாது என்று கடுமையாக விமர்சித்தார்.
தொகுதிப் பங்கீடு மற்றும் உழவர்கரை போட்டி
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப் போதிய கால அவகாசம் இல்லாததால், விசிக சார்பில் முதற்கட்டமாக 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
"காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், 3 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டோம். தற்போது உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியினரும் உழவர்கரை தொகுதியில் எமது வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றுவார்கள் என நம்புகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு இடமளிக்க முடியாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது என்றும், அவர்களும் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்கே உதவுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு
தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதாகக் கூறினார். தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கும் திட்டம், கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். தமிழக மக்கள் மதவாத சக்திகளைப் புறக்கணிப்பதில் உறுதியாக உள்ளனர்.
வேட்பாளர் மாற்றம் குறித்த விளக்கம்
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தாம் போட்டியிடத் திட்டமிட்டது குறித்தும், பின்னர் வேட்பாளரை மாற்றியது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.
"நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த நேரமே பேச வாய்ப்பு கிடைப்பதால், அடித்தட்டு மக்களின் உணர்வுகளைச் சட்டப்பேரவையில் நேரடியாகப் பிரதிபலிக்க விரும்பினேன். ஆனால், எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்திகளால் அந்த முடிவைக் கைவிட்டேன். தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றத்தில் எவ்வித அரசியல் காரணமும் இல்லை; சமூக நீதியைக் காக்கவும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்றார்.
ஆளுநர் மீது புகார்
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட திருமாவளவன், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆளுநர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பது விதிகளுக்கு முரணானது என்றார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவரைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், "கருணாநிதியை ஸ்டாலின் எவ்விதம் கவனித்துக்கொண்டார் என்பது உலகுக்கே தெரியும். அரசியல் லாபத்திற்காக இவ்வாறு பேசுவது அறமல்ல," என்று குறிப்பிட்டார்.
பாஜகவின் 'சித்துவேலைகள்' தென்னிந்திய மண்ணில் எடுபடாது என்று குறிப்பிட்ட திருமாவளவன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனத் தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்தார்.




















