TASMAC Holiday: தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Tasmac shop holiday : நாள் ஒன்றுக்கு நூறுகோடிக்கு மேல் வருமானத்தை கொடுத்து வரும் டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குடிமகன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை விரைவுப்படுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் பல கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வாக்குபதிவு, வாக்கு எண்ணிக்கை, வாக்குப்பெட்டி தயார் நிலையில் ஏற்பாடு செய்தல், அரசு ஊழியர்களை பணிக்கு அமர்த்துதல், பாதுகாப்பு பணிக்கு மத்திய துணை ராணுவப்படையை வரவழைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்கவும் பறக்கும் படை அமைத்து சோதனை செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாகவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று மதுபான கடைகளை மூட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 21,22 மற்றும் 23ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும். இதன்படி, இந்த 4 நாட்களும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடப்படவுள்ளது.
பார்களையும் மூடனும்
மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். மேலும், பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




















