AIADMK Alliance: பொதுத்தொகுதி கிடைச்சதே வெற்றி தான்.. ஜான் பாண்டியன் பெருமிதம்!
அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், எங்களுக்கு பொது தொகுதி வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பொதுத்தொகுதி கிடைத்ததே எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. இதில் பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் பாஜக , பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல தமமுகவுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போதும் தனித்தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி இம்முறை பொதுத்தொகுதியில் களமிறங்குகிறது.
எங்களுக்கு வெற்றி தான்
அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், எங்களுக்கு பொது தொகுதி வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களையெல்லாம் பட்டியலின மக்கள் என்ற பிரிவில் வைத்திருந்தார்கள். நீண்ட ஆண்டுகால ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர்களின் எண்ணங்கள் இதுவரை தேர்தலில் நமக்கு பொது தொகுதியே கொடுக்கவில்லை என இருந்தது. இப்போது அந்த எண்ணம் நிறைவேறியிருக்கிறது. எங்கள் கட்சி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறது. நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் அமையும்! "தேசிய ஜனநாயகக் கூட்டணி" வெற்றி பெறுவது உறுதி! pic.twitter.com/Z42rdvhRHe
— John Pandian (@JohnPandianTMMK) March 12, 2026
தொடர்ந்து பேசிய ஜான் பாண்டியன், பொது தொகுதி வழங்கியதன் மூலம் பட்டியலினத்தில் வெளியேறுவதன் முதல் படியில் வெற்றி பெற்றிருக்கிறோம். படிப்படியாக வெற்றி பெறுவதற்கு இது முன்னுதாரணமாக அமையும். எம்.பி., தேர்தலில் நான் நிற்கும்போது ராஜபாளையம் தொகுதியில் வேலை பார்த்துள்ளோம். நல்ல வெற்றிகரமான தொகுதியாகும். வெற்றி வாய்ப்பு பிரகாசமான ஒரு தொகுதியாகும்.
நான் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பங்கேற்பதால் அதிமுக, பாஜகவின் எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை ஆலோசனை செய்து முடிவெடுப்போம். எங்கள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி ஏற்படாமல் சுமூகமாக முடிவடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















