DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகவும் மோசமான நிலையில் திமுக தோல்வி அடைந்ததற்கு என்னென்ன காரணங்கள்? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலின் முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-வே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பலரும் கருதிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் நேரடி திமுக-வினர் வெறும் 50க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
திமுக தோல்விக்கு காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.
1. களத்தை கணிக்கத் தவறியது:
திமுக-வின் இந்த மிகப்பெரிய படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது கள நிலவரத்தை கணிக்கத் தவறியது ஆகும். புதுமைப் பெண் திட்டம், மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம் என பல திட்டங்களை மு.க.ஸ்டாலின் ஆட்சி அறிமுகப்படுத்தியிருந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், கொலை குற்றச்சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், வேங்கைவயல் சம்பவம், என பல விமர்சிக்கும் சம்பவங்களும் திமுக மீதான குற்றச்சாட்டாக இருந்தது. அதை சரி செய்வதற்கும், அந்த மக்களின் அதிருப்தியை சீர் செய்வதற்கும் போதுமான நடவடிக்கைகளை திமுக செய்யத் தவறியது.
2. நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இன்மை:
தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சி திமுக. அண்ணா தொடங்கிய இந்த கட்சியை வெற்றி, தோல்வியின்போதும் வழிநடத்தியவர் கருணாநிதி. அவர் கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மூலமாக களத்தில் நடப்பதையும், மக்கள் மனநிலையையும் மிகவும் தெளிவாக தொடர்ந்து கவனித்து வந்தார். அதனால்தான், திமுக-வே படுதோல்வி அடைந்த காலத்தில் அவர் தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், பல முகமை நிறுவனங்கள் கட்சியின் முடிவுகளில் தலையிடத் தொடங்கிய பிறகு மூத்த நிர்வாகிகளின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இது அவர்களுக்கே எதிர்வினை ஆற்றியது.
3. குறைத்து மதிப்பிட்டது:
திமுக-வின் இந்த தோல்விக்கு மிகப்பெரிய காரணம் விஜய்யையும், தவெக-வையும் குறைத்து மதிப்பிட்டதே ஆகும். நடிகனின் ரசிகர்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று தப்புக்கணக்கிட்டனர். செல்லும் இடமெல்லாம் கட்டுக்கடங்காமல் வந்த ரசிகர்கள் கூட்டம், விஜய் திமுக மட்டுமே தங்கள் நேரடி எதிரி என்று பரப்புரை செய்தது, தனது கட்சியின் கொடியை ஏந்திய தொண்டர்களே விஜய்யைப் பார்த்ததும் ஓடிச் சென்றது போன்ற நிகழ்வுகளின்போதே விஜய்யின் செல்வாக்கை திமுக உணரத் தவறிவிட்டது. இவை அனைத்தைக் காட்டிலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் ஆதரவை அதிகம் பெற்ற ஒரு நடிகரின் அரசியல் தாக்கம் எந்தளவு ஏற்படுத்தும்? என்பதை திமுக தலைமை குறைத்து மதிப்பிட்டுவிட்டது.
4. முகமைகள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஆதிக்கம்:
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது புதியதாக உருவெடுத்திருக்கும் ஒரு யுக்தி தேர்தல் முகமைகளிடம் வியூகம் பெறுவது. கருணாநிதி காலம் வரை அதுபோன்ற செயல்பாடுகளில் இறங்காத திமுக கடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முகமையுடன் கைகோர்த்தது. கடந்த தேர்தலில் அவர்களின் வியூகம் இல்லாவிட்டாலும் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆகும். ஆனால், இந்த தேர்தலில் மற்றொரு நிறுவனத்தின் தலையீடு திமுக-வின் வேட்பாளர்களின் தேர்வு, அவர்களின் செயல்பாடு ஆகியவற்றில் அதிகளவு தலையிட்டதாகவும், வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் அவர்களின் தலையீடு அதிகளவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் திமுக-விற்கும், களநிலவரத்திற்கும் இடையே இடைவெளியை உண்டாக்கியது.
5. மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம்:
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு திமுக-வின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் பொதுமக்கள் பலரிடமும் அதிருப்தியை உண்டாக்கியது. பொன்முடி பேசிய சர்ச்சைப் பேச்சு, கேஎன்நேரு மனு அளிக்க வந்த ஒரு பெண்மணியிடம் கோபமாக பேசியது என பலரது செயல்பாடுகளும் திமுக-வினர் மீது மிகப்பெரிய அதிருப்தியை மக்களுக்கு ஏற்படுத்தியது. பல அமைச்சர்களும், பல எம்எல்ஏ-க்களும் மக்களால் எளிதில் அணுக முடியாத அளவிற்கு இருந்தது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.
6. சமூக வலைதள மோதல்:
சமூக வலைதளங்களைப் பொறுத்தமட்டில் திமுக-வைக் காட்டிலும் தவெக-வே பலத்துடன் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாது ஆகும். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கருத்தியல் ரீதியாக விமர்சிப்பதைக் காட்டிலும் தவெக-விற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை தற்குறி என்று தொடர்ந்து விமர்சித்து வந்தது பலருக்கும் ஆதங்கத்தை உண்டாக்கியது. திமுக-வை எதிர்ப்பவர்களையும், தவெக-வை ஆதரிப்பவர்களையும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதையும் திமுக ஆதரவாளர்கள் பலரும் கையாண்டது பொதுமக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
7. விமர்சனங்களுக்கு பதில் அளிக்காதது:
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு ஏன் செய்யவில்லை, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு செய்யாதது என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியதற்கு ஆளுங்கட்சியினர் முறையாக பதில் அளிக்காமல் மழுப்பியதும் அவர்கள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்தது.
இதுபோன்ற காரணங்களால் திமுக மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது.
வேதனையான சாதனை; முதல்முறையாக தேர்தலில் தொடர்ந்து 2ஆம் முறை தோற்ற அதிமுக!
ட்ரெண்டிங் செய்திகள்



















