Tamil Nadu Election 2026: முடிந்தது தேர்தல்! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
Tamil Nadu Election 2026 Polling: தமிழ்நாட்டில் 234 தாெகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றது.
வாக்குப்பதிவு:
234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தனக்கென தனி வாக்கு வங்கி வைத்துள்ள நாம் தமிழர், முதன்முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர்.
மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். காலை முதலே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் விமானங்கள் மூலமாக தமிழகம் வந்தனர். சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் நேற்று பலத்த போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் சாெந்த ஊர்களுக்குச் சென்று வாக்கு அளித்தனர்.
5.73 கோடி வாக்காளர்கள்:
எஸ்ஐஆர் காரணமாக போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இரு முகவரியில் இருந்த வாக்காளர்கள் ஆகியோர் களையப்பட்டு தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாக இந்த தேர்தலில் களமிறங்கினர். மேலும், திரையுலகின் பிரபலமான நடிகராக உள்ள விஜய்யின் முதல் அரசியல் களம் என்பதாலும் வாக்குப்பதிவு கடந்த தேர்தலைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருந்தது.
வாக்குப்பதிவு நிறைவு:
காலை முதலே தொடர்ந்து அதிகமாக இருந்து வந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு 82.24 சதவீதமாக வாக்குப்பதிவானது. கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த முறை வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. பேருந்துகள் முறையாக கிடைக்காத சூழலில் தாமதமாக சொந்த ஊர் சென்றதாலும், வெயில் தாழ்ந்த பிறகு வாக்களிக்க வந்ததாலும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 70 லட்சம் வாக்குகள் பதிவானது. பின்னர், தேர்தல் முடிவு நேரமான 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த தேர்தலிலே இந்த தேர்தலில்தான் அதிக சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று கருதப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு முன்பு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் பழுதானதால் ஏற்பட்ட தாமதத்திற்கு பிறகு, வாக்கு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டும், மாற்றப்பட்டும் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு:
வாக்குப்பதிவு முடிவடைந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பூத் ஏஜெண்ட்கள் முன்பு வாக்கு இயந்திரங்களை சீல் வைத்து, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் வழியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்



















