அப்படிப்போடு. மிஷினில் வேட்பாளர் படங்கள்.. தபால் ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம்.. தேர்தல் அப்டேட் இதோ!
தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும். தேர்தலுக்கான 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.

வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுகே முன்னுதாரமான தேர்தலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரண்டு நாட்கள் பயணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முன்னிலை
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். பணிகள் நாட்டுகே முன்னுதாரணமாக நடைபெற்றது. அந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம்” என கூறினார்.
இப்படியான நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும் என்றும் தேர்தலுக்காக அமைக்கப்படும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும் என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது. அதேசமயம் செல்போன் கொண்டு வருபவர்கள் கொடுத்துச் செல்ல செல்போன் பாதுப்பகம் அமைக்கப்படும். சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு சதவிகிதம் வெளியிடப்படும். மேலும் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் கண்காணிக்கப்படும். எனவே தேர்தல் அதிகாரிகள் எந்தவித அச்சமும் இன்றி செயல்படலாம்.
தபால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம்
மேலும் வழக்கமாக முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள் இந்த தேர்தலில் கடைசி 2 சுற்று வாக்குகள் இருக்கும்போது எண்ணப்படும். அதேபோல் வாக்குப்பதிவு மிஷினில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களுக்கு பதில் இந்த முறை புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டில் 20 முதல் 29 வயதான வாக்காளர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். அதேசமயம் 19 முதல் 20 வயதிலான வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
மொத்தம் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.90 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை எதிர்த்து 267 பேர் தான் மேல்முறையீடு செய்திருந்தனர். 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார்கள். எந்த வாக்குச்சாவடியிலும் 1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். வாக்கு எண்ணும்போது வேட்பாளர் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் விவிபாட்டில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்” என ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.





















