Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நாளை (மார்ச்.22) முடிவடைகிறது. இன்னும் இழுபறியில் INDIA கூட்டணி உள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நாளை (மார்ச்.22) முடிவடைகிறது. இன்னும் இழுபறியில் இண்டியா கூட்டணி உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இண்டியா (INDIA) கூட்டணி ஆகிய இரண்டுமே தொகுதிப் பங்கீட்டை முழுமையாக இறுதி செய்யாமல் இழுபறியில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் தேர்தல் அறிவிப்பு: திணறும் கட்சிகள்
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கத்தை விட மிக விரைவாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் 16-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய போதிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடியாததால் முதல் இரண்டு நாட்கள் ஒருவர்கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே, மார்ச் 18-ம் தேதி அமாவாசை என்பதால், 'நல்ல நேரம்' கருதி காங்கிரஸ், திமுக மற்றும் லோக் ஜனசக்தி கட்சியினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே போட்டி போட்டுக்கொண்டு மனுத்தாக்கல் செய்தனர்.
முக்கியப் புள்ளிகள் மனுத்தாக்கல்: இதுவரை 135 மனுக்கள்
கூட்டணிக்குள் குழப்பம் நீடித்த போதிலும், முக்கியத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து மனுத்தாக்கல் செய்தனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன். பேரவைத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் ராஜவேலு.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் இதுவரை மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் நீடிக்கும் மௌனம்
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முறையாக அறிவித்துள்ளது. ஆனால், அதன் பிரதான கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகளான அதிமுக, லோக் ஜனசக்தி ஆகியவை தங்களின் முழுமையான வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. எந்தெந்தத் தொகுதிகள் யாருக்கு என்பதில் நிலவும் பிடிவாதமே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிகிறது.
இண்டியா கூட்டணி நீடிக்குமா? வேல்முருகனின் அதிரடி முடிவு
மறுபுறம், இண்டியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது புதுச்சேரி அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதுச்சேரியில் இண்டியா கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுமா அல்லது வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளில் வேட்பாளர்கள் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளை மதியம் 3 மணிக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து மனுத்தாக்கல் செய்தாக வேண்டும். கடைசி நிமிடத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா அல்லது கூட்டணிகளில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.




















