TN Assembly: ஒரே கிராமம்.. ஆனால் 2 தொகுதிக்கு ஓட்டுபோட்றாங்க - தமிழ்நாட்டில் எந்த ஊரு?
கோவை மாவட்டத்தில் உள்ள பொன்னாண்டம்பாளைய கிராம மக்கள் 2 தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் இன்னும் 33 நாட்களுக்குள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக மொத்த தமிழ்நாடும் மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறுகள் எப்போதுமே தனித்துவமானதாக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே கிராமத்தினர் இரண்டு எம்.எல்.ஏ.க்களைத் தேர்வு செய்கின்ற சுவாரஸ்ய சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
ஒரே கிராமம் 2 தொகுதிகள்:
அந்த கிராமம் கோவை மாவட்டத்தில் உள்ள பொன்னாண்டம்பாளையம் ஆகும். இந்த கிராமத்தில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 7 தெருக்கள் உள்ளது. இந்த கிராமம் அரசூர், கணியூர் மற்றும் நாரணாபுரம் கிராம ஊராட்சிகளுக்கும், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கும் கீழே வருகிறது.
இந்த கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் கணியூர் கிராம ஊராட்சிக்கு கீழே வருகிறது. அதேசமயம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் அரசூர், நாராணபுரம் கிராம ஊராட்சியின் கீழ் வருகிறது. மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு கீழே 40 குடும்பங்கள் வருகிறது. இதனால், இந்த கிராமத்தின் ஒரு பகுதி அவினாசி சட்டமன்றத்தின் கீழேயும், இந்த கிராமத்தின் ஒரு பகுதி சூலூர் சட்டமன்ற தொகுதியிலும் வருகிறது.
எந்தெந்த தொகுதி:
இதனால், ஒரே கிராமமாக இருந்தாலும் இந்த ஊர் மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் அவினாசி தொகுதி வேட்பாளருக்கும், ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் சூலூர் தொகுதி வேட்பாளருக்கும் வாக்களிக்கின்றனர். சட்டமன்ற தொகுதி மட்டுமின்றி மக்களவைத் தேர்தலிலும் இந்த கிராமத்தினருக்கும் இதே சூழல்தான் நிலவுகிறது.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரும் மக்கள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரும் மக்கள் கோவை தொகுதியின் கீழ் வசித்து வருகின்றனர். இதனால், மக்களவைத் தொகுதியிலும் அந்த கிராம மக்கள் 2 தொகுதியில் வாக்களிக்கின்றனர்.
கொங்கு மண்டலம்:
இந்த கிராமம் கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவின் கீழ் வருகிறது. கோவையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கில் உள்ளது. பல்லடம், அன்னூர் போன்ற பகுதிகள் இந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.
தமிழ்நாட்டின் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிப்பது யார்? என்பதை தீர்மானிப்பதில் கொங்கு மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொங்கு மண்டலத்தில் சூலூர் மற்றும் அவினாசி தொகுதி முக்கியமான தொகுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.




















