பல்லாவரம் சட்டமன்ற தொகுதி.. ரேஸில் முந்தும் ஐஜேகே .. களைகட்டும் தேர்தல் களம்!
அதிமுக கூட்டணியில் பல்லாவரம் தொகுதியில் டாக்டர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி களம் காண்கிறது. அந்த கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில் அங்கு கள நிலவரம் விறுவிறுப்படைந்துள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி,எஸ்.டி.பி.ஐ. , தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவில் தற்போதைய எம்எல்ஏ கருணாநிதி அல்லது தாம்பரம் துணை மேயர் காமராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்குமே கொடுக்காமல் அந்த தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
தேமுதிக சார்பில் அனகை முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். உள்ளூர் நபராக இருந்தாலும் பெரிய பணபலம் இல்லாதவர் என்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் திமுகவினர் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த தொகுதி என்பதால் அவர்களும் எந்த அளவுக்கு முருகேசனுக்கு தோளோடு தோள் நின்று வேலை செய்வார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
அதே சமயம் அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியில் டாக்டர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி களம் காண்கிறது. அந்த கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். ஐஜேகே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. முரசு சின்னமும் இரட்டை இலை சின்னமும் மோதும் போது இரட்டை இலைக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மும்முரமாக களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது முதல் சுற்றில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே இரட்டை இலை துணையோடு களத்தில் முந்துகிறது.




















