நாளை மாலை 7 மணி தான் லாஸ்ட்.! வெளியூர் நபர்கள் ஊரை விட்டு வெளியேறனும்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறவேண்டும் எனவும், திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அதிலும் நாளை மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவடையவுள்ளதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல ஊர்களில் இருந்தும் நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்
அந்த வகையில் நாளை மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவடையவுள்ள நிலையில், வெளியூர் நபர்கள் நாளை மாலை 7 மணிக்கு ஊரை காலி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், தமிழகத்தில் 23ம் தேதிசட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு பிறகு பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும், அதைத் தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கட்சியை ஆதரித்தோ, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ பிரசாரம் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்களில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது
மேலும் வாக்குப்பதிவு முடிவு வரை மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது. தேர்தல் பிரசாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, ட்விட்டர், வாட்ஸ்அப், முகநூல் ஆகியவற்றிலும் தொலைப்பேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரசாரம் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் உள்பட வாகன அனுமதிகள் இரவு 7 மணிக்கு மேல் செல்லாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தினம்- தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களை வாக்குச்சாவடி அழைத்துவர வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாடகைக்கு வாகனங்களை அமர்த்த அனுமதி இல்லையெனவும், வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை வேட்பாளர்களின் அரசியல் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை விதிமுறைகள் மீறுபவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்


















