நல்லா படிக்கிற பசங்கள தான் காப்பி அடிப்பாங்க! - அதிமுகவை வறுத்தெடுத்த கனிமொழி!
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தேர்தல் பயத்தை தாண்டி தேர்தல் ஜுரம் வந்து, இப்ப தேர்தல் ஜன்னி வந்துருச்சு.

ஈரோடு: ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., சென்னிமலை - வெள்ளோடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வேட்பாளருமான முத்துசாமியை ஆதரித்து, சென்னிமலை - வெள்ளோடு நால் ரோடு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; திமுக வேட்பாளர் முத்துசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, நிச்சயமாக வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வகொடுப்பேன் என சொன்னபடி, ஆட்சிக்கு வந்ததும் அதை வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். மறுபடியும் திமுக ஆட்சி அமைந்தவுடன், அது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ் புதல்வன்” திட்டங்களின் மூலம் முதலமைச்சர் வழங்கி வரும் 1,000 ரூபாய், அடுத்த முறை ஆட்சிக்கு வந்ததும் 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
“இல்லம் தேடி கல்வி”, “தாயுமானவன்”, “மக்களை தேடி மருத்துவம்” போன்ற மக்களை நேரடியாக சென்றடைந்து பயனளிக்கும் திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றிய பெருமையோடு தான், உங்களிடம் உரிமையுடன் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள், நம்மை பார்த்து “அவருடைய தேர்தல் அறிக்கையை பார்த்து நம்ம காப்பீடு அடிச்சிடுச்சுட்டுருக்காரு. ஆனால், நாங்கள் இன்னும் அவர்களின் தேர்தல் அறிக்கையைப் படிக்கவே இல்லை. அங்க என்ன இருக்குன்னு படிச்சு என்ன பிரயோஜனம்? ஆட்சிக்கு வரப்போறதுக்கும் இல்லை.
யாராக இருந்தாலும், ஒருவரை காப்பி அடிப்பது தவறு. ஆனாலும், யாரை பார்த்து காப்பி அடிப்பார்கள்? நன்றாகப் படிக்கும் மாணவர்களைத்தான் பார்த்து காப்பி அடிப்பார்கள்; உங்களை பார்த்து காப்பி அடித்தால் என்ன பிரயோஜனம்?
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தேர்தல் பயத்தை தாண்டி தேர்தல் ஜுரம் வந்து, இப்ப தேர்தல் ஜன்னி வந்துருச்சு. அந்த ஜன்னி வந்தவுடனே என்ன பேசறோன்னு அவருக்கு தெரியல,. அதனால, என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்காங்க.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கான நிதியை “ஹிந்தி படித்தால்தான் வழங்குவோம்” என்று கூறும் ஒன்றிய அரசுடன் கைகோர்த்து நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி ஆட்சிக் காலத்தில், கொரோனா நேரத்தில் மருந்தும் சரியாக கிடைக்கவில்லை; உணவும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டன.
இப்போது, கேஸ் கிடைக்குமா இல்லையா? கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்? என்ற பதட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். பிரதமர் அடிக்கடி “மேக் இன் இந்தியா” என்று கூறுகிறார். அதானி, அம்பானி போன்ற சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைத்ததாகத் தோன்றுகிறது.
கேஸ் தேவைக்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலையில், இன்று சிலிண்டர் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்ற குழப்பம் உருவாகியுள்ளது. வீடுகளில் சமைக்கும் பெண்கள் பதட்டத்தில் உள்ளனர். இப்போதே முன்பதிவு செய்தாலும், எத்தனை நாட்களில் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது. இதை கேட்க தைரியமில்லாத ஒருவர்தான் எடப்பாடி பழனிசாமி.
விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோதும் எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருந்தார். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை; வாயையே திறக்கவில்லை.
இதை நாம் புரிந்து கொண்டு இந்த மண்ணை காக்க வேண்டும் என்றால், நமக்காக பேசக்கூடிய, நமக்காக போராடக்கூடிய, எவராக இருந்தாலும் எதிர்த்து நிற்கக்கூடிய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தொகுதியில் தி.மு.க அரசு செய்த வளர்ச்சிப் பணிகள்:
ஈரோடு மேற்கு தொகுதியில் சோலார் பேருந்து நிலையம் ரூ.63.5 கோடி மதிப்பீட்டில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பகுதியில் ரூ.18.48 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, ரங்கம்பாளையம் பகுதியில், ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொகுதியிலுள்ள ராம்சார் தலங்கள் 77.19 ஹேக்டேர் பரப்பளவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு-சித்தோடு சாலை நான்கு வழிச்சாலையாக ரூ.138 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மேற்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்:
ஈரோடு மாநகராட்சியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். ஈரோடு - சத்தி நெடுஞ்சாலையில் இருந்து அம்மன் கல்லூரி விடுதி வரை செல்லும் பாதையில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அரசு மருத்துவமனை முதல் திண்டல் ரிங் ரோடு வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தரப்படும். சுய உதவி குழு பெண்களுக்கு முதலீட்டுடன் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை பிணை எதுவுமின்றி மானியத்துடன் வங்கிக்கடனுதவி வழங்கப்படும்.
இன்னும் பல திட்டங்கள் உள்ளன. மீண்டும் நமது ஆட்சி வர உள்ளது; தொடர்ந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















