1952ல் எதிர்க்கட்சி.. இன்று 5 சீட்டுகள்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏன் இந்த நிலைமை?
1952ம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி இதே திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டது.

2026 சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளை திமுக கூட்டணியில் போட்டியிடுவது ஏன் என்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அதில், 1952ம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முத்தரசன், 1952ம் ஆண்டு தமிழ்நாடு பிரிக்கப்படாதபோது அப்போதைய சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் ஒருபகுதியும் சென்னை மாகாணத்தில் இருந்தது. அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , ஐக்கிய முன்னணி அமைப்பு, தந்தை பெரியார் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்த நிலையில் நாங்கள் வென்றோம்.
ஆட்சி அமைப்பதற்குரிய வாய்ப்பை அப்போதைய சென்னை மாகாண மக்கள் வழங்கினார்கள். ஆனால் கூட்டணியை உடைத்து சூழ்ச்சி செய்து சட்டமன்ற உறுப்பினர், மேல்சபை உறுப்பினராகவும் இல்லாத ராஜாஜி முதலமைச்சராக வந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு
அந்த தேர்தல் தொடங்கி 2021 தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றுள்ளது. கூடுதலாக 10 முதல் 12 வேட்பாளர்கள் வரை வெற்று பெற்றிருக்கிறோம். 2016ம் ஆண்டு தேர்தலில் மட்டும் தான் கம்யூனிஸ்ட்கள் சட்டசபையில் இடம்பெறவில்லை. 1991ல் நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதில் 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்தும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றது. அதில் ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடம் பெற்றது. தேர்தல் வெற்றி தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று.
5 இடங்களில் போட்டியிட காரணம்
மற்றொறு காரணமாக இன்றைய தேர்தல் முறையை சொல்லலாம். 234 தொகுதிகளில் நாங்கள் 5 இடங்களில் தான் போட்டியிடுகிறோம். அதனை வைத்து தான் தேர்தல் சதவிகிதத்தை கணக்கிடுகிறார்கள். மீதமுள்ள 229 தொகுதிகளில் தோழமை கட்சிகளை ஆதரிக்கும் எங்களின் வாக்குகள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அதேபோல் தான் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களின் வாக்குகள் கணக்கிடப்படுவதில்லை. என்றைக்கு விகிதாச்சாரம் முறை அமல்படுத்தப்படுகிறதோ அன்றைக்கு தான் ஒவ்வொரு அரசியல் கட்சியின் உண்மையான பலம் தெரிய வரும்.
நாங்க இந்த தேர்தலில் எண்ணிக்கை குறைவாக தான் போட்டியிடுகிறோம். ஆனால் அடுத்த தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிக இடங்களில் கூட போட்டியிடலாம். ஒரு தேர்தலை வைத்து எந்த கட்சியையும் குறைத்து மதிப்பிட முடியாது. காலம் தான் தீர்மானிக்கும். நாங்கள் தேர்தலை மட்டும் நம்பியிருக்கும் கட்சி கிடையாது. மக்களோடு மக்களாக இருக்க வேண்டும், மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும். அதை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. அதை தொடர்ந்து செய்து வருகிறோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்தல் சூழலில் கூட்டணி அவசியம், தேவை கருதி குறைந்த இடங்களில் போட்டியிடுகிறோம்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் அது மக்களுக்கு தான் பயன்படும்” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.


















