Durai Vaiko: விஜய் மேல சந்தேகமா இருக்கு.. புயலை கிளப்பிய துரை வைகோ பேச்சு.. நடந்தது என்ன?
நடிகர் விஜய் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவரை ரசிக்குற இளைஞர்கள் கூட்டம் உள்ளது. அதை மறுக்க முடியாது என மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு வகையில் அநீதி இழைக்கும்போதெல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை மதிமுகவின் முதன்மை செயலாளராக நான் வரவேற்கிறேன். இந்த தேர்தல் மிகவும் சவாலானது. ஒரு பக்கம் மதவாத பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது. மறுபக்கம் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. இந்த கூட்டணியில் எங்கள் பக்கம் தேமுதிக வந்து சேர்த்துள்ளது.
இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இதனைப் பார்த்து சந்தோஷமா பட முடியும். அவர் தன் கருத்தை சொல்லியுள்ளார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்தவொரு இயக்கமும் எங்கள் கூட்டணியில் சேருவது என்பது மகிழ்ச்சி தான்.
கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை
தொடர்ந்து ஆட்சியில் பங்கு பற்றிய கேள்விக்கு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு நிலைப்பாடு என்பது உள்ளது. எங்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. மதிமுக தரப்பில் அப்படி ஒரு கோரிக்கையை நாங்கள் வைக்க மாட்டோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அதை சொல்லிவிட்டேன்.
தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி என்ற ஒன்று இருந்ததில்லை. இப்போதைய குழப்பமான சூழலில் அதனைக் கேட்பது நல்லது கிடையாது என எங்களுடைய நிலைப்பாட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார் என துரை வைகோ கூறினார்.
விஜய் மீது சந்தேகம்
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவரை ரசிக்குற இளைஞர்கள் கூட்டம் உள்ளது. அதை மறுக்க முடியாது. அதேசமயம் அவர் பாஜகவை மதவாத சக்தி என எதிர்க்கிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கொடுக்காதது, நிதி அளிக்காதது, எஸ்.ஐ.ஆர். பிரச்னை போன்ற அநீதிகள் நடக்கும்போது விஜய் எந்தவித கருத்தையும் தெரிவிக்க மறுக்கிறார். பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார். அந்த நேரத்தில் பேசாதது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அவர் தேர்தலில் 15 சதவிகிதம் வரை வாக்குகள் பெறுவார் என்ற யூகம் உள்ளது. அவர் கொள்கை நன்றாக உள்ளது என்றாலும், அதன்படி அவர் செயல்படுவாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். ஆனால் அந்த வாக்குகள் வெற்றியா மாறுமா என்பது இனிதான் தெரிய வரும். விஜய் பிரிக்கும் வாக்குகள் எங்கள் கூட்டணியின் வெற்றியை எளிதாக்கும் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.





















