மாணவிகளுடன் செல்ஃபி.. மக்களுடன் டீ! சீர்காழியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய முதல்வர் ஸ்டாலின்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு, உழவர் சந்தை மற்றும் தேநீர் கடைகளில் பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சீர்காழி: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை மேற்கொண்ட நடைப்பயிற்சி மற்றும் மக்கள் சந்திப்பு அப்பகுதியில் பெரும் எழுச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்காட்டில் தங்கியிருந்த முதல்வர்
புதுச்சேரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று மாலை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள தனது துணைவியார் துர்கா ஸ்டாலின் இல்லத்திற்கு இரவு வருகை தந்தார். இன்று மாலை சீர்காழியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்ற உள்ளார்.
உழவர் சந்தையில் ஒரு காலைப்பொழுது
இன்று காலை, சீர்காழி தென்பாதி பகுதியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்திலிருந்து முதல்வர் தனது நடைப்பயிற்சியைத் தொடங்கினார். அங்கிருந்து நேராக சீர்காழி உழவர் சந்தைக்குச் சென்ற அவர், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் காய்கறி விலைகள், விற்பனை நிலை மற்றும் சந்தையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சரைத் தங்கள் அருகிலேயே கண்ட வியாபாரிகள் நெகிழ்ச்சியுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வீதி வீதியாக மக்கள் சந்திப்பு
தொடர்ந்து கச்சேரி சாலை, அரசு மருத்துவமனை சாலை, விகாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் முதல்வருக்குக் கைக்குலுக்கித் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை அருகே கூடியிருந்த பொதுமக்கள், அப்பகுதியின் மருத்துவ வசதிகள் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்த மனுக்களை அவரிடம் வழங்கினர்.
தேநீர் கடையில் கலந்துரையாடல்
நடைப்பயிற்சியின் போது, சீர்காழி பிரதான சாலையில் இருந்த ஒரு சாதாரண தேநீர் கடைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீரெனச் சென்றார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்திய அவர், தேநீர் மாஸ்டர் மற்றும் ஊழியர்களிடம் கடையின் வியாபாரம் குறித்தும், வாழ்வாதாரம் குறித்தும் கனிவுடன் விசாரித்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வித ஆடம்பரமும் இன்றி தங்களோடு அமர்ந்து தேநீர் அருந்தியதைக் கண்ட பொதுமக்கள் அந்த இடத்தை சூழ்ந்தனர்.
மாணவ - மாணவிகளுடன் உரையாடல்
சாலைகளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவ - மாணவிகளைக் கண்டவுடன் முதல்வர் தனது நடையை நிறுத்தி அவர்களிடம் பேசினார். "நன்றாகப் படிக்கிறீர்களா?" என்றும், "காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் சரியாகச் சென்றடைகிறதா?" என்றும் அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மாணவிகள் உற்சாகத்துடன் முதல்வருடன் உரையாடினர். சில மாணவிகள் முதல்வருடன் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டனர்.
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
இந்த நடைப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக, சீர்காழி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு (மதிமுக) ஆதரவு திரட்டுவதை முதல்வர் முதன்மைப்படுத்தினார். சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், "நமது வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த முதல்வர், "உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்" என்று உறுதியளித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடனிருந்த இந்த நடைப்பயிற்சி நிகழ்வு, தேர்தல் நெருங்கும் வேளையில் சீர்காழி தொகுதியில் திமுக கூட்டணியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஊட்டியுள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு இந்தத் திடீர் மக்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.





















