போகிற இடமெல்லாம் போர்க்கொடி... திகைத்துப் போய் நிற்கும் திமுக சிட்டிங் எம்எல்ஏ..!
பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் நிவேதா முருகனை, குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாம்புள்ளி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய தொகுதியாகக் கருதப்படும் பூம்புகாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மாம்புள்ளி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் நிவேதா முருகனை, குடிநீர் பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி மோதலில் பலப்பரீட்சை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளில், பூம்புகார் தொகுதி மட்டும் ஒரு தனித்துவமான போர்க்களமாக மாறியுள்ளது. மயிலாடுதுறை இத்தொகுதியில் தான் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இங்கு மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டியானது பிரதானமாக இரு முனைப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில்: மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் ஐந்தாவது முறையாகக் களமிறங்குகிறார்.
திமுக சார்பில்: தற்போதைய எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் இரண்டாவது முறையாகத் தனது வெற்றியைத் தக்கவைக்கப் போட்டியிடுகிறார்.
மாம்புள்ளி கிராமத்தில் திடீர் பரபரப்பு
இந்நிலையில் திமுக வேட்பாளர் நிவேதா முருகன், தனது கூட்டணி கட்சியினருடன் குத்தாலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் புடைசூழ, உற்சாகமாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாலை வேளையில் மாம்புள்ளி கிராமத்திற்குள் நுழைந்தார்.
அங்குள்ள மாதா கோவில் தெரு பகுதியில் வேட்பாளர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேட்பாளரின் வாகனத்தை மறித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் நிலவியது.
"காவி நிறத்தில் குடிநீர்" - பொதுமக்கள் ஆவேசம்
வேட்பாளரை வழிமறித்த கிராம மக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக, குடிநீர் விநியோகம் குறித்துப் பேசிய பெண்கள், "ஐந்து வருடங்களாக எங்கள் பகுதிக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. குழாய்களில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில், காவி நிறத்தில் (துரு ஏறிய நிலையில்) வருகிறது. இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது வாக்கு கேட்டு மட்டும் எப்படி வருகிறீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
சமாதானப்படுத்த முயன்ற திமுகவினர்
மக்களின் இந்தத் திடீர் எதிர்ப்பால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த மக்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் வாக்கு கேட்க வரக்கூடாது எனத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சலசலப்பிற்குப் பிறகு, வேட்பாளர் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. "குடிநீர் விநியோகத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்படும் என்றும், காவி நிறத்தில் தண்ணீர் வருவது குறித்துத் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துத் தூய்மையான குடிநீர் வழங்க உறுதியளிக்கிறோம்" என்றும் கூறி மக்களைச் சமாதானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒருவாறாகச் சமாதானமடைந்த மக்கள் வேட்பாளரைச் செல்ல அனுமதித்தனர். அதன் பின்னரே நிவேதா முருகன் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
பரபரப்பான அரசியல் சூழல்
பூம்புகார் தொகுதியில் ஏற்கெனவே ஐந்து முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட பவுன்ராஜ் (அதிமுக) ஒருபுறம் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், ஆளுங்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நிவேதா முருகனுக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் இதே நிலை நீடிப்பது, மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
"அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் பிரச்சனை போன்ற வாழ்வாதாரக் கோரிக்கைகள் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன" என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பூம்புகார் தொகுதியில் நிலவும் இந்த நேரடிப் போட்டியில், மக்களின் அதிருப்தி யாருக்குச் சாதகமாக அமையும் என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.
ட்ரெண்டிங் செய்திகள்




















